கட்சியிலேயே இல்லாத அன்புமணி எப்படி கூட்டணி பேச முடியும்?...பாமக ராமதாஸ் அதிரடி
தைலாபுரம் : பாமக கட்சியில் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி எப்படி கூட்டணி பேச முடியும்? பழனிசாமி-அன்புமணி கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு நாடகம் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
அன்புமணி தலைமையிலான பாமக நேற்று அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவிக்கப்பட்டது. அதிமுக கூட்டணியில் பாமக.,விற்கு 17 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என டீல் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது அதிமுக, அன்புமணி உடன் கூட்டணி பேசியது சட்ட விரோதமானது என நேற்றே பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று காலை தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நான் மத்திய அமைச்சர் ஆக்கிய ஒருவரே எனக்கு வேட்டு வைப்பார் என நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. கட்சியிலேயே இல்லாத ஒரு நபர் கூட்டணி பேசினாரா, ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாரா என எனக்கு தெரியாது. அன்புமணி, தந்தைக்கே துரோகம் செய்தவர். அவருக்கு யாரும் ஓட்டு போட மாட்டார்கள். அன்புமணி-பழனிச்சாமி கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு நாடகம். அன்புமணி, கட்சியை என்னிடம் இருந்து அபகரிக்க சூழ்ச்சி செய்கிறார்.
அன்புமணியின் தில்லுமுல்லு வேலைகள் அனைத்தும் தெரிந்ததால் தான் அவரை கட்சியின் உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கினோம். பாமக நான் உருவாக்கிய கட்சி. நான் தான் கூட்டணி பேச முடியும். நாங்கள் இடம் பெறும் கூட்டணி தான் ஆட்சி அமைக்கும். கட்சியிலேயே இல்லாத ஒருவர் எப்படி கூட்டணி பேச முடியும். அன்புமணியுடன் அதிமுக கூட்டணி பேசுவது சட்ட விரோதமானது. பாமக கட்சியும், மாம்பழம் சின்னமும் என்னிடம் தான் உள்ளது என ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.