அன்புமணி தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது.. கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன்: ராமதாஸ்!
சென்னை: அன்புமணி ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது. இதுவரை 8 மாதத்தில் தனிக்கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன். இனிமேல், என்பெயரை படுத்தக் கூடாது. ஆர்.அன்புமணி என்று இனிஷியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே பாமகாவில் உட்கட்சி பூசல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், ஒரு பரிசோதனைக்காக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். 12 ஆண்டுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். அந்த ரத்தக்குழாய்கள் எந்த நிலையில் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக சென்றிருந்தேன். அவர்களும் பரிசோதித்து விட்ட நல்ல நிலையில் இருப்பதாக கூறியதால், மறுநாளே நான் வீடு திரும்பி விட்டேன். நான் ஐசியுவில் சிகிச்சை பெறவில்லை. தமிழகத்தில் உள்ள ஒரு சில அரசியல் தலைவர்களை தவிர்த்து, மற்றவர்கள் என்னை நேரிலோ, அலைபேசியிலோ அழைத்து நலம் விசாரித்தனர். இப்போது ஆரம்பிக்கப்பட்ட ஒரு கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே என் நலனை விசாரிக்கவில்லை.
நான் ஒரு மணிநேரம் ஐசியுவில் இருந்ததாகவும், அதன்பிறகு, அறைக்கு வந்துவிடுவார் என்று மருத்துவர்களிடம் பேசிய போது, அவர்கள் கூறியதாக அன்புமணி கூறியிருக்கிறார். அவர் பேசிய பேச்சுக்கள் தமிழகத்தில் இருக்கும் அனைவரையும் உலுக்கியிருக்கும். ஐயாவுக்கு ஏதாவது ஆச்சுனால் தொலைத்து போடுவேன். சும்மா இருக்க மாட்டேன். வேடிக்கை பார்க்க மாட்டேன். ஐயாவை வைத்து நாடகமாடிட்டு இருக்காங்க என்று எல்லாம் அன்புமணி பேசியுள்ளார்.
அய்யாவை பார்த்துக்கொள்ள துப்பு இல்லை. படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படி எல்லாம் பேசியிருக்க மாட்டார். அதனால் தான் நிர்வாகக் குழுவில் சொன்னேன், 'அன்புமணிக்கு தலைமைப்பண்பு இல்லை' என்றேன். நோய் தொற்றும் அளவுக்கு நான் வியாதியில் இல்லை. பாமகவை தோற்றுவித்தது, அதன் உரிமையாளர் நான் தான். இப்போது, அதே கட்சி மற்றும் அதே கொடியை வைத்து தன்னுடைய கட்சி என்று சொல்வது நியாயமில்லை. இதனை தேர்தல் ஆணையம், நீதிமன்றத்தில் சந்திப்போம். இப்படி எல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. பாமகவுக்கும், அன்புமணிக்கும் எந்த சம்பந்தமில்லை.
பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 8,000 பேர் பங்கேற்றனர். அதேபோல, மாநில செயற்குழு கூட்டத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிர்வாகக் குழுவில் ஒருவர் மட்டும் வரவில்லை. ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரையின் பேரில் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். அன்புமணி ஒரு தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்வது நல்லது. இதுவரை 8 மாதத்தில் தனிக்கட்சி தொடங்குமாறு 3 முறை சொல்லி விட்டேன். இனிமேல், என்பெயரை படுத்தக் கூடாது. ஆர்.அன்புமணி என்று இனிஷியல் வேண்டுமானால் போட்டுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.