பாமகவின் இரு தலைவர்களும் பேச வேண்டும்: பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி

Meenakshi
Jun 16, 2025,06:22 PM IST

சென்னை: ராமதாஸ் - அன்புமணி இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல. இரு தலைவர்களும் முதலில் பேச வேண்டும் என்று பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.


பாமக நிறுவனர் ராமதாஸிற்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸிற்கும் இடையே சமீப காலமாகவே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த மோதல் போக்கு இன்று குறைந்து விடும் நாளை குறைந்து விடும் என்று அக்கட்சியை சேர்ந்தவர்கள் இருவருக்கும் இடையே சமாதானம் பேசி வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்து வருகிறது. மேலும், மேலும் மோதல் போக்கே அதிகரித்து வருகிறது.




இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம், திண்டினம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை இன்று சந்தித்தார் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் அனைவரின் ஆசையும். இருவரும் சேர்ந்து பேசி முன்னெடுத்துச் சென்றால் தான் கட்சி நன்றாக இருக்கும் என்பதை நாங்கள் அனைவரும் எதிர்பார்க்கிறோம். ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் அரசியல் புரியாதவர்கள் அல்ல. இரு தலைவர்களும் பேச வேண்டும். 


அதற்கான சூழ்நிலை விரைவில் உருவாகும் என நினைக்கிறேன். இருவரும் பேசி தீர்வு கண்டால் கட்சியின் வளர்ச்சிக்கும்,  தேர்தலை சந்திப்பதற்கும், கட்சியினர் இடையே உள்ள மன உளைச்சலுக்கும் நல்ல தீர்வாக இருக்கும். அதைத்தான் தினந்தோறும் பேசி வலியுறுத்தி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.