ராமதாஸ்-அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும்: ஜி.கே.மணி பேட்டி

Meenakshi
Jun 06, 2025,03:49 PM IST

சென்னை:ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. பாமகவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாமகவில் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என நம்புகிறோம் என்று பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.


கடந்த சில நாட்களாகவே பாமகவில் உட்கட்சி பூசல் நடந்து வருகிறது. இதற்கு காரணம் அக்கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தான் என்று சில நாட்களுக்கு முன்னர் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரவி வந்தது. இது குறித்து பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில்,   என்னைப் பற்றி அவதூறு பரப்புவது நல்லது அல்ல. என்னை அவதூறு படுத்துவதால் அவர்களுக்கு சந்தோஷம் என்றால் மகிழ்ச்சி தான். மருத்துவர் அய்யாவும் அன்புமணியும் விரைவில் சந்திக்க வேண்டும் என்பது தான் எங்கள் இயக்கத்தின் ஆசை. அப்படி சந்தித்து விட்டால் எங்களின் இயக்கம் வீறு கொண்டு எழும்.  இது ஒரு வேதனை காலம். இதில் இருந்து மீண்டு திரும்பவும் குடும்ப பாசத்துடன் இருக்கும் கட்சியாக மாற வேண்டும்.


ஒரு நெருக்கடியான சூழல் எங்கள் கட்சியில் உருவாகியுள்ளது. அதை சரி செய்ய முயன்று வருகிறோம். 45 ஆண்டுகளாக உழைத்துக் கொண்டிருக்கும் நான். எங்கள் கட்சி சிதைய வேண்டுமென்று நினைப்பேனா?.  சமூக ஊடகங்களில் என்னை பற்றி அவதூறு செய்திகள் வருகின்றன. எப்படி மனசாட்சி இல்லாமல் இப்படி எழுதுகிறார்கள்.  ரூமில் அமர்ந்து கண்ணீர் வடிக்கின்றேன்  என்று தெரிவித்திருந்தார்.




இந்நிலையில்,நேற்று  ராமதாஸ்-அன்புமணி சந்திப்பு நிகழ்ந்தது. இது குறித்து பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசுகையில், விழுப்புரம், தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அன்புமணி, ராமதாஸ் ஆகிய இரு தலைவர்கள் நடத்திய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாமகவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ராமதாஸ் -அன்புமணி இடையே சமாதானம் ஏற்படும். அற்கான தொடக்கமாக இதை பார்க்கலாம். பாமகவில் இருந்து விரைவில் நல்ல செய்தி வரும் என நம்புகிறோம்.


தைலாபுரம் வந்த அன்புமணி, ராமதாஸ் இருவரும் பேசிக்கொள்ளவில்லை என்று தவறான தகவல் பரப்பப்படுகிறது. கட்சிக்கு அப்பாற்பட்ட சிலரும் டாக்டர் ராமதஸை சந்தித்து பேசி வருகின்றனர். கட்சியை பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அந்த சந்திப்புகள் நடை பெற்று வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.