மாம்பழம் சின்னம் முடக்கப்படும்...பாமக வழக்கில் தேர்தல் கமிஷன் பதில்

Su.tha Arivalagan
Dec 04, 2025,01:03 PM IST

டெல்லி : பாமக கட்சியும், மாம்பழம் சின்னமும் யாரிடம் உள்ளது என்பது தொடர்பான ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையேயான வழக்கில் டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் சார்பில் அளிக்கப்பட்டுள்ள பதில் பரபரப்பை கிளப்பி உள்ளது.


பாமக யாருடையது என்பது தொடர்பாக பாமக நிறுவனரும், டாக்டருமான ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான வழக்கு டில்லி ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது ஆஜரான அன்புமணி தரப்பு வழக்கறிஞர், டாக்டர் ராமதாஸ் தரப்பு வாதங்களை பாமக என்றே கூற முடியாது. அவர்களின் மனுவை தள்ளுபடி செய்யுங்கள் என வாதிட்டார். டாக்டர் ராமதாஸ் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், போலி ஆவணங்களை கொடுத்து அன்புமணி தலைவர் என கூறுகிறார். அதனால் இந்த மனு விசாரணைக்கு ஏற்றதே என வாதிடப்பட்டது. இரு தரப்பு இடையே காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றது.




இந்த வழக்கில் ஆஜரான தேர்தல் கமிஷன், தேர்தல் சமயத்தில் இரு தரப்பு இடையே பிரச்சனை இருந்தால் பாமக.,வின் மாம்பழ சின்னம் முடக்கி வைக்கப்படும். இரு தரப்பும் பிரச்சனைக்குரியதாக இருந்தால் படிவம் ஏ மற்றும் படிவம் பி ஆகியவற்றில் இரு தரப்பு கையெழுத்து போடுவதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளாது. மாறாக கட்சியின் சின்னம் முடக்கி வைக்கப்படும் என பதிலளித்துள்ளது.


பாமக விவகாரத்தில் வேட்பாளர்களை அங்கீகரித்து யார் கையெழுத்து இடுவதை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்ளும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். நீதிபதிகளின் கேள்விக்கு பதிலளித்த தேர்தல் கமிஷன் இவ்வாறு தெரிவித்துள்ளது. இதனால் பாமக யாருக்கு, மாம்பழ சின்னம் யாருக்கு என்ற குழப்பம் மேலும் வலுவடைந்துள்ளது. தந்தை-மகன் அதிகார மோதல் விவகாரம் டில்லி கோர்ட்டிலும் தீவிரமடைந்து வருவதால் பாமக தரப்பில் யாரிடம் கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்குவது என்ற குழப்பத்திலும், கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாத நிலையிலும் தமிழக அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன.


இதற்கிடையில் பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்த தேர்தல் ஆணையத்தை எதிர்த்து பாமக சார்பில் டில்லி ஜந்தர்மந்திரில் இன்று ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டு வருகிறது.