NLC இனி நமக்கு தேவையில்லை: சட்டசபையில் சௌமியா அன்புமணி ஆவேச பேச்சு!
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC) குறித்து பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி மிகவும் காரசாரமான மற்றும் அழுத்தமான கருத்துக்களைப் பதிவு செய்தார்.
NLC மின்சாரம் தேவையில்லை:
சட்டப்பேரவையில் பேசிய சௌமியா அன்புமணி, "என்.எல்.சி (NLC) நிறுவனத்திடமிருந்து தமிழ்நாடு அரசுக்கு தற்போது வெறும் 2,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைத்து வருகிறது. தமிழ்நாடு மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்று, மின் மிகை மாநிலமாக உருவெடுத்துள்ள இந்தச் சூழ்நிலையில், நமக்கு இனி NLC நிறுவனத்தின் மின்சாரமோ அல்லது அந்த நிறுவனமோ தேவையே இல்லை" என்று திட்டவட்டமாகக் கூறினார்.
சுற்றுச்சூழல் மற்றும் விவசாயப் பாதிப்பு:
என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்க விரிவாக்கப் பணிகளால் கடலூர் மண்டலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்படும் பேரழிவுகள் குறித்துப் பேசிய அவர், "ஏற்கனவே என்.எல்.சி நிர்வாகம் 40 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் மற்றும் விவசாயப் பகுதிகளை அழித்துவிட்டார்கள். தற்போது மேலும் 60 ஆயிரம் ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த தீவிர முயற்சி செய்து வருகிறார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும், இயற்கையையும் அழிக்கும் இந்த நிலக் கையகப்படுத்தும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு எக்காரணம் கொண்டும் அனுமதி வழங்கக் கூடாது" என வலியுறுத்தினார்.
CSR நிதியை முறையாகப் பயன்படுத்த கோரிக்கை:
என்.எல்.சி நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR Fund) குறித்துப் பேசுகையில், "NLC நிறுவனம் வழங்கும் CSR நிதியைக் கொண்டு தமிழ்நாட்டின் நீர்நிலைகளைப் பாதுகாக்கவும், விவசாயிகளின் நலனை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக அந்த நிதியின் மூலம் தடுப்பணைகள் கட்டுவதற்கும், நெல் சேமிப்புக் கிடங்குகளை அமைப்பதற்கும் தமிழ்நாடு அரசு NLC நிறுவனத்திற்கு அறிவுறுத்த வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.
தமிழ்நாட்டின் வளங்களையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்கும் நோக்கில், NLC நிறுவனத்தின் மேலே சொல்லப்பட்டுள்ள நிலக்கையகப்படுத்துதலை உடனடியாகத் தடுத்து நிறுத்த மாநில அரசு உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என அவரது சட்டமன்றப் பேச்சு பேரவையில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.