பாமக செயற்குழு கூட்டம்: அன்புமணிக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Meenakshi
Jul 08, 2025,05:51 PM IST

விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


பாமக நிறுவனர் ராமதாஸிற்கும் அன்புமணி ராமதாஸிற்கும் இடையே மோதல் போக்கு சமீபகாலமாக தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், திண்டிவனத்தை அடுத்த ஓமந்தூரில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளி சங்கர், இணை பொதுச்செயலாளர் அருள், பொருளாளர் சையத் மன்சூர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த செயற்குழு கூட்டத்தில் ராமதாஸின் மகள் காந்திமதியும் பங்கேற்றார்.




இந்த செயற்குழு கூட்டத்தில் அன்புமணிக்கு எதிராக 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, பொதுவெளியில் ராமதாஸின் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. தலைவர் பதவியை மீண்டும் அபகரிக்கும் எண்ணத்தில், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அன்புமணி செயல்படுவதாக கண்டனம். தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்துவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை. அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸிற்கு முழு அதிகாரம் அளித்து பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


இந்த நிகழ்ச்சியின் போது ராமதாஸ் பேசுகையில், நமக்கு கிடைக்கக் கூடிய தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கிவிட்டது.  வெற்றி வாய்ப்பு உள்ள நிர்வாகிகள், தங்கள் விருப்ப மனுவை கொடுக்க ஆயத்தமாக வேண்டும். சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்கு ஏ ஃபார்ம் கொடுத்து கையெழுத்து போடுவது நான் தான். அடுத்து நடக்கவிருக்கும் மகளிர் மாநாட்டிற்கு குறைந்தது 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளார்கள். 8 ஆண்டுகளுக்கு பின்னர் நடக்கும் மாநாடு இது. கூட்டணியில் தான் நாம் 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம். அதற்கான அதிகாரத்தை எனக்கு வழங்கி உள்ளீர்கள். எல்லா அதிகாரமும் எனக்கு மட்டுமே உண்டு என்று தெரிவித்துள்ளார்.