பூக்காரம்மா!
- முனைவர் ராணி சக்கரவர்த்தி
லட்சுமி அம்மா, என் வீட்டின் அருகில் ஒரு சிறிய பூக்கடை வைத்திருந்தார். 60 வயதைக் கடந்தவர், வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில், வாடிக்கையாளர் வீடுகளுக்கு சென்று, பூ விநியோகம் செய்வது அவரது வழக்கம். அனைவரோடும் அன்போடு பேசுபவார். எல்லா வீடுகளுக்கும் பூ கொடுத்து விட்டு வந்து, எங்கள் வீட்டு வாசலில் அமர்ந்து கதையடிப்பார். வெறும் கழுத்து, அள்ளி முடிந்த நரைத்த முடி, கணுக்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிய சேலை, தேய்ந்து போன செருப்பு, கையில் ரப்பர் வளையல், முகம் மலர்ந்த சிரிப்பு, இதுதான் லட்சுமி அம்மாள். அவர் பேசுவது எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், அவருடைய பேச்சை நிறையக் கேட்டிருக்கிறேன்.
அவருக்கு நான்கு குழந்தைகள். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். ஒரு மகளும், மகனும் பட்டப்படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி க் கொண்டிருக்கிறார்கள். ஒரு மகன் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நான்கு பேருக்கும் திருமணம் ஆகி, தங்கள் குடும்பத்தோடு நல்ல நிலையில் இருக்கிறார்கள்.
இந்த நான்கு குழந்தைகளையும், படிக்க வைத்து ஆளாக்குவதற்காக, 40 வருடமாக இவர் பூ விற்பனை செய்து வருகிறார். இவரின் கணவர் திருமணமான முதல் 20 வருடங்கள், குடிக்கு அடிமையாகி, தன்னிடமிருந்து சொத்தையும், விற்றுத் தொலைத்து விட்டார். காலையில் கட்டிட வேலைக்குச் செல்வார், மாலையில் தினமும் குடித்துவிட்டு வந்து இவரை அடிப்பது, குழந்தைகளைத் துன்புறுத்துவது, வீட்டில் இருக்கும் காசை எடுத்துக் கொண்டு சென்று விடுவது என பல வகையில் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சந்தேகக் குணம் வேறு. குடியின் பாதிப்பால், ரத்த அழுத்தம் அதிகமாகி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாகிப் போனார். பத்து வருடங்கள் படுக்கையில் இருந்த தன் கொடுமைக்காரக் கணவனை, ஒரு குழந்தை போல லட்சுமி அம்மாள் பார்த்துக் கொண்டார். ஏதாவது ஒரு இல்லத்தில் சேர்த்துவிடலாம் என யாராவது சொன்னால், வேணாம் பா, நாலு பிள்ளைகளோட அஞ்சாவது பிள்ளையா இருந்துட்டுப் போறாரு என்று சொல்லி வாய் அடைத்து விடுவார்.
குழந்தைகளின் படிப்பு, திருமணம், உறவினர்களுக்கான செய்முறைகள், மருத்துவச் செலவு, குடும்ப பராமரிப்பு என அனைத்து செலவுகளையும் சமாளிப்பதற்காக, அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை, அவரது கையும், காலும் இயங்கிக் கொண்டே இருக்கும். அவரின் காய்ந்துபோன கைகளும், வெடிப்பு நிறைந்த கால்களுமே, அவரின் உழைப்புக்குச் சாட்சி. பிள்ளைகள் தான் நல்ல நிலைமையில் இருக்கிறார்களே, பிறகு ஏன் இன்னும் பூவித்து கஷ்டப்படுற என நான் கேட்டதற்கு, அப்ப அவங்க வயித்துக்காக ஓடினேன். இப்ப என் வயித்துக்காக ஓடுகிறேன் என உயிரோட்டம் இல்லாத சிரிப்போடு அவர் சொன்னது இன்னும் என் மனதில் நிற்கிறது.
இந்த லட்சுமி அம்மாவைப் போலவே பல பெண்கள், நமது சமுதாயத்தில் விளிம்பு நிலை தொழிலாளர்களாகவும் அமைப்புசாரா தொழிலாளர்களாகவும், தினக்கூலிகளாகவும், விவசாயக் கூலிகளாகவும், வீட்டுப் பணியாளர்களாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்ததாக இருக்கிறது. இவர்களுக்கென குறிப்பிட்ட வேலை நேரமோ, நிரந்தர வருமானமோ, பணிப் பாதுகாப்போ இருப்பதில்லை. இவர்களின் உழைப்புக் கேற்ற ஊதியமும், அங்கீகாரமும் கிடைப்பதில்லை. இவர்கள் பணி புரியும் இடத்திலும், தொழில் செய்யும் இடத்திலும், இவர்களுக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களும், அத்துமீறல்களும், வன்முறைகளும் சட்டத்தின் வெளிச்சத்திற்கு வராமலேயே புதைக்கப்பட்டு விடுகிறது. தண்டனை பற்றிய பயம் இல்லாததால், அந்த ஆண்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்த இவர்களுக்குத் தைரியமும் இல்லை. சட்டப் போராட்டம் நடத்த பணமும், நேரமும் இவர்களிடம் இல்லாததால், தனக்கு நடக்கும் கொடுமைகளை சகித்துக் கொண்டு சென்று விடுகிறார்கள். இவர்களில் பல பெண்கள், கணவனை இழந்தவராகவோ அல்லது கணவனால் கைவிடப்பட்டவராகவோ இருப்பது குற்றவாளிகளுக்குச் சாதகமாக அமைந்துவிடுகிறது.
தங்களின் உடல்நலம் பற்றியோ, மனநலம் பற்றியோ, உரிமைகள் பற்றியோ, இவர்களுக்கு எந்த புரிதலும் இருப்பதில்லை, அதைப் பற்றித் தெரிந்து கொள்ள நேரமும் இல்லை. பலருடைய குடும்பங்கள் குடி நோயின் தாக்கத்தினால் சிதைந்து போயிருக்கும். வாங்கிய கடனுக்கு வட்டி கட்டியே, பல பெண்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டு இருக்கும். மற்ற ஆண்களின் வக்கிர பார்வையில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள, தன்னை கடினமானவர்களாகவும் அழகற்றவர்களாகவும் மாற்றிக் கொள்கிறார்கள்.
இந்தப் பெண்கள், நேரத்திற்கு சத்தான உணவை உண்பதோ, தேவையான அளவு தண்ணீர் குடிப்பதோ, உடல் உபாதைகளுக்கு சரியான வைத்தியம் பார்ப்பதோ இல்லை என்பதால் பல பெண்கள் உடல் நலப் பாதிப்போடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். சில பெண்கள் குடி மற்றும் புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி, உடல் நலத்தை மேலும் கொடுத்துக் கொள்கிறார்கள். துன்பங்கள், வேதனைகள், இயலாமைகள் இந்தப் பெண்களை, அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறது. இவர்கள் வாழ்வின் ஒரே நோக்கம், ஒரு குறிக்கோள், தங்களின் குழந்தைகளை, நல்ல நிலைக்கு ஆளாக்குவது. பல தாய்மார்கள், இதை திறம்பட செய்து முடித்து, தன் மகளை/மகனை அரசு உயர் அதிகாரிகளாக்கி, பல பெண்களுக்கு முன் உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சில பெண்கள் அதிலும் தோல்வியுற்று, தங்களின் மகன்களால், அவர்களின் ஊதாரித்தனத்தால், குடிப்பழக்கத்தால் படாத பாடு படுவதை, நம் பல இடங்களில் பார்க்க முடிகிறது.
தோழமைகளே, நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் இப்படிப்பட்ட பல பெண்களை, சாதாரணமாகக் கடந்து சென்று கொண்டு தான் இருக்கிறோம். "இது அவர்களின் விதி" என ஒரு சிலரும் "நாம் என்ன செய்து விட முடியும்" என ஒரு சிலரும் "என் பிரச்சினையை தலைக்கு மேலே இருக்கு, இவர்களைப் பற்றி எங்கு யோசிப்பது" என பலரும் சொல்லிவிட்டு நகர்ந்து விடுகிறோம். எல்லையில் நின்று நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் ராணுவ வீரர்கள் போலவே, இந்த பெண்களும், தன் குடும்பத்திற்காகப் போராடும் வீராங்கனைகள் தான். வாழ்க்கைப் போராட்டத்தின் தைரியம் நிறைந்த போராளிகள்.
அந்தப் பெண்கள், நாம் தினமும் பார்க்கும் காய்கறிக்கார அம்மாவாக இருக்கலாம், துப்புரவு தொழிலாளியாக இருக்கலாம், நமது வீட்டின் அருகில் கட்டிட வேலை செய்யும் பெண்ணாக இருக்கலாம், கடைகளில் வேலை செய்யும் பெண்ணாக கூட இருக்கலாம், உணவகத்தில் மேசை துடைக்கும் பெண்ணாக இருக்கலாம், ஆட்டோ ஓட்டும் பெண்ணாக இருக்கலாம், நம் வீட்டில் வேலை செய்யும் பெண்ணாகவும் இருக்கலாம். யாராக இருந்தாலும், நாம் அவர்களுக்காக பெரிய காரியங்கள் செய்ய வேண்டியதில்லை, அவர்களைப் பார்க்கும் பொழுது, ஒரு நிமிடம் நின்று அவர்களோடு பேசலாம், நலம் விசாரிக்கலாம், பாராட்டலாம், நன்றி சொல்லலாம், நட்பு பாராட்டலாம் தேவைப்படும்போது நம்மால் முடிந்த உதவியை அவர்களுக்குச் செய்யலாம். இந்த தைரிய லட்சுமிகளை, போராளிகளை நாம் பாராட்டாமல் வேறு யார் பாராட்டுவார்கள்.
லட்சுமி அம்மாள் வந்து சென்றால், அந்த இடம் முழுவதும் நிறைந்திருக்கும் பூ வாசம், இன்னும் என் நினைவில் இருக்கிறது, அவரின் நினைவுகளோடு சேர்த்து.
கட்டுரை: முனைவர் ராணி சக்கரவர்த்தி எழுதிய மனதோடு பேசுவோம் தோழி நூலிலிருந்து.