வெயில் வெளுக்குதுங்கிறதுக்காக.. பொது இடத்தில் போய் ஆம்லேட் ஆப்பாயில் போடாதீங்க மக்களே!

Su.tha Arivalagan
Apr 25, 2024,05:57 PM IST

சென்னை: வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி என்று பாடல் இருப்பது போல இப்போது மக்கள் வெயிலோடு ஜாலியாக உறவாடிக் கொண்டுள்ளனர். அதேசமயம், இந்த விளையாட்டு அளவாக இருக்கும் என்பதை காவல்துறையின் நடவடிக்கை ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.


இந்த முறை கடுமையாக இருக்கிறது கோடைக்காலம். வெயில் வெளுத்தெடுக்கிறது. வெயில் காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் கொளுத்தியது. தற்போது மேலும் அதீதமாக வெயில் வெளுத்து வருகிறது. சில ஊர்களில் கோடை மழையும் பெய்கிறது.




வெயில் கொடுமையால் மக்கள் விதம் விதமான விளையாட்டுக்களில் இறங்கியுள்ளனர். அதாவது  கொதிக்கும் சாலையில் முட்டையைப் போட்டு ஆம்லேட் செய்வது ஆப்பாயில் போடுவது என்று கிளம்பியுள்ளனர். இதற்கு போலீஸார் தற்போது கிடுக்கிப்பிடி நடவடிக்கை எடுத்து எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேலத்தில் பிரபாகரன் என்ற தன்னார்வலர் ஒருவர் தனது நண்பரை அழைத்துக் கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். கலெக்டர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள ரவுண்டானாவில் அமர்ந்த அவர்கள் சாலையில் முட்டையை உடைத்து ஆம்லேட் போட்டனர். இதை பார்க்க மக்கள் பலர் கூடி விட்டனர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


தகவல் அறிந்த போலீஸார் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி காவல் நிலையம் கூட்டிச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, வெயில் கொடுமை அதிகம் இருக்கிறது என்பதை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இது போல செய்ததாக அவர்கள் கூறினர். அதன் பின்னர் பொது இடத்தில் இதுபோல மக்களைப் பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாது. முதல் முறை என்பதால் எச்சரித்து அனுப்புகிறோம் என்று கூறி இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

  

மழையை எப்படி கொண்டாடுகிறோமோ அதேபோல வெயிலையும்  சந்தித்து சமாளிப்போம். அதேசமயம், பொது இடத்தில் நாலு பேருக்கு டிஸ்டர்பன்ஸ் ஏற்படுவது போல இதுபோல நடக்காமலும் இருக்க வேண்டியது நமது கடமையாகும். பொறுப்புணர்வோடு நடந்து கொள்வோம். பொது இடத்தில் இதுபோல ஏடாகூடாமாக செய்து சிக்கிக் கொள்ளாதீர்கள்.