பூங்கோதையின் கணக்கு!
- தி. மீரா
பூங்கோதை அன்று மிகவும் களைப்பாக இருந்தாள். அவளது கணவன் சிறிதும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. அவளுக்கு எரிச்சல் கோபம் ஆத்திரம் ஆதங்கம் எல்லாம் இருந்தது. புலம்பினாள்.
காலையிலிருந்து வீட்டு வேலைகளையும் செய்து அலுவலகத்திலும் நிர்வாகத்தைப் பார்த்து வீட்டுக்கு வந்து குழந்தைகள் மூவருக்கும் வேண்டியதை செய்து ஒவ்வொரு நாளும் சுமைகள் அதிகமானதே தவிரக் குறையவில்லை. அவள் அம்மாவும் மாமியாரும் படிக்கவும் இல்லை வேலைக்கும் போகவில்லை. வீட்டு வேலையைச் செய்துக் கொண்டு இருந்தார்கள். கணவர்கள் உதவி செய்யாவிட்டாலும் கவலைப்பட வில்லை. இன்று அவள் வேலைக்குப் போக வேண்டிய சூழ்நிலை.
பொருளாதாரத்துக்கு துணையாகவும் அவளது படிப்பையும் தகுதியையும் வைத்து வேலைக்குப் போகிறாள்.. குழந்தைகளுக்கு நல்லதொரு வாழ்க்கை இன்றைய காலத்தில் தருவதற்கு பொருளாதாரம் முக்கியமாக உள்ளது.பூங்கோதையின் கணவர் சதீஷ் நல்லதொரு பொறுப்பில் உயர்ந்த நிலையில் பணி புரிகிறான். ஆனால் வீட்டிற்கு வந்தால் ஒரு டம்ளரைக் கூட நகர்த்த மாட்டான். ஒரு சிறு உதவி கிடையாது. காய்கறி எப்பொழுதுவாது வாங்கி வருவான். அதுவும் சரியாக இருக்காது.
ஆனால் பூங்கோதையிடம் கணக்காக இந்தப் பணத்தை இப்படி செய்யலாம் தவணை முறையை நீ கட்டி விடு இப்படியெல்லாம் தெளிவாக பூங்கோதையின் சம்பளத்தை செலவழிக்க யோசனைகள் சொல்லுவான். அதே போல அலுவலக வேலைகள் தவிர வேறு எதிலும் ஈடுபடுவதோ அல்லது அதிகப்படியாக சம்பாதிப்பதோக் கிடையாது. பூங்கோதையும் அதெல்லாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால் குடும்பத்தில் துணி துவைப்பதிலோ சமைப்பதிலோ காய்கறிகள் நறுக்கித் தருவதிலோ துணி மடித்து வைப்பதிலோ பாத்திரங்களை கழுவி வைப்பதிலோ உதவிகள் செய்யலாம். ஆனால் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லித் தருவதற்குக் கூட அலட்டிக் கொள்வான்.
இவளுக்கு பொறுப்பும் சுமைகளும் நாளுக்கு நாள் அதிகமாகத்தான் போனது. மாமியார் வேறு புரிந்து கொள்ளாமல் அவன் ஒரே பையன் செல்லமாக வளர்த்தேன். அவனுக்கு எதுவும் தெரியாது. அவனை குறை கூறாதே என்கிறார்கள். அவன் எல்லாம் வீட்டு வேலைகள் செய்ய மாட்டான் என்றாள். வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்வது நல்லது. என்னாலும் முடியாது என்பாள் அடிக்கடி. வேலைக்காரியும் ஒழுங்காக வருவதில்லை அதுதான் பூங்கோதையின் ஆதங்கம்.
டியூசனுக்கு பிள்ளைகளை கொண்டு விட்டு கூட்டி வருவதும் தினமும் செய்வதில்லை. மொத்தத்தில் அலுவலக வேலைகள் மட்டுமே செய்வான். பூங்கோதை ஒவ்வொன்றாகப் பார்த்து பார்த்து வீட்டிற்கு அனைத்தும் செய்து வந்தாள். அவளுக்கு முதலில் மகன் ஆதேஷ் பிறந்தான் 10 வயதாகிறது. அவன் அம்மா மேல் மிகவும் பாசம். அடுத்து மகள் ஆர்த்தி 8 வயது கடைசியாக மகன் அசோக் 5 வயது.குழந்தைகள் அம்மா கஷ்டப்படுவதைப் பார்த்தார்கள் தினமும். அன்று புலம்பி தீர்த்தும் எதுவும் நடக்கவில்லை என்று தெரிந்ததும் முடிவிற்கு வந்தாள்.
பொறுப்பு என்பது ஆண் பெண் இருவருக்கும் சமம்.மகன் மகள் இருவருமே எல்லா வேலைகளை தெரிந்துக்
கொள்வது நல்லதுதானே. ஆதேஷுக்கும் ஆர்த்திக்கும் சின்ன சின்ன வேலைகளாக சொல்லிக் கொடுத்து வளர்த்தாள். ஆதேஷும் ஆர்த்தியும் அம்மாவிற்கு உதவி செய்வதோடு இல்லாமல் எல்லா வேலைகளையும் படிப்போடு கற்றுக் கொண்டார்கள். சமையல் முதல் சகலமும் படிப்போடு நன்கு அறிந்தார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் தேவையான சமயங்களில் ஆதேஷ் ஆர்த்தி இருவரும் அழகாக கையாளுவார்கள். பெண்ணுக்கு படிப்பு வேலை பொருளாதாரம் சொந்தக் காலில் நிற்பது முக்கியமோ ஆணுக்கும் வீட்டு நிர்வாகம் சமையல் எல்லாம் தெரிவது அவசியம்.
இன்று கல்லூரிப் படிப்புக்கு வளர்ந்து நிற்கிறார்கள் இருவரும் நல்ல வளர்ப்போடு.வீட்டு வேலைகள் எளிதாக பொறுப்போடுக் கையாளப்படுகிறது. பூங்கோதையின் வேலை சுமையும் அழகாகக் குறைந்தது. பூங்கோதையின் மாமியார் வாயைத் திறக்க வழியில்லை. சதீஷும் புரிந்து கொண்டான். இன்றைய காலத்தில் ஆண் பெண் இருவருக்கும் எல்லா பொறுப்புகளும் சமம்தான். பெண்ணே செய்ய வேண்டும் என்று சுமையை ஏற்றி விடுவது பெண் சுதந்திரமோ விடுதலையோ பெண்கல்வியோ அல்ல என்கிறாள் பூங்கோதை. ஆணுக்கும் குடும்ப நிர்வாகத்தில் வேலைகளில் பொறுப்புணர்ச்சி வேண்டும் என்கிறாள். பூங்கோதை போன்ற அம்மாக்கள் இன்றைய தேவை.. நாளைய நல்ல சமுதாயத்திற்கு.
(ஈரோட்டைச் சேர்ந்த பாவலர் முனைவர் தி. மீரா, ஆசிரியர், தென்தமிழுக்காக கட்டுரைகள், கவிதைகள் படைத்து வருகிறார், கிரியேட்டிவ் எழுத்தாளர்)