உண்மையான அன்பு.. ஒரு நிமிடக் கதை (9)
- பூரணவள்ளி சேகர்
கண்ணன் மிகவும் வசீகரமான தோற்றம் கொண்டவன். சிறுவயதில் தந்தையை இழந்திருந்தாலும் தாயின் வளர்ப்பில் வளர்ந்தவன். ஓரளவு வசதி இருந்ததால் அவனின் தாய் கமலா சிறப்பாகவே குடும்பத்தை நடத்தி வந்தாள்.
கமலாவிற்கு கண்ணன் ஒரே மகன்.
கமலா தன் மகன் கண்ணனை நல்ல அன்பும் குணமும் கொண்டவனாக வளர்த்திருந்தாள். கண்ணன் படித்து முடித்து சுயதொழில் நடத்தி வந்தான். தொழில் சிறப்பாக நடந்ததினால் வசதி வாய்ப்புகள் பெருகின.
கண்ணனின் பணிவான குணமும் வசீகரமும் அனைவரையும் கவர்ந்தன. கண்ணனுக்குத் திருமணம் செய்து வைக்க கமலா நினைத்தாள். பெண் தேடும் படலம் ஆரம்பமானது. கண்ணனைச் சுற்றி இருந்த பெண்களில் பலர் கண்ணனைத் திருமணம் செய்து கொள்ள முயற்சி செய்தனர்.
அவர்களுள் புவனா என்ற பெண்ணைத் திருமணம் செய்ய கண்ணன் ஆசை கொண்டு இருந்தான். ஆயினும் அதனை புவனா விடம் கூறாமலே இருந்தான். இதற்கிடையில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த கவிதாவைத் தன் மகன் கண்ணனுக்குத் திருமணம் செய்ய கமலா முடிவு செய்தாள். கண்ணன் அரை மனதுடன் திருமணத்திற்கு சம்மதித்தான்.
அம்மாவின் பேச்சைத் தட்ட முடியாமல் நடந்த திருமணம் என்பதாலும் மனதில் புவனாவின் நினைவுகள் இருந்ததாலும் கண்ணன் ஒரு வித தடுமாற்றத்துடன் காலம் தள்ளினான். கவிதா அதிக அன்பு மற்றும் அக்கறையுடன் தன் கணவனையும் மாமியாரையும் கவனித்து வந்தாள்.
புவனா பணக்கார வாலிபனைத் திருமணம் செய்து இருந்தாள்.அவள் கணவனும் மிகவும் நல்லவன். ஆடம்பரத்திற்காக அவனைத் திருமணம் செய்த புவனா சிறிது நாளில் விவாகரத்து பெற்று அவனது பணத்தில் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தாள்.
ஒரு நாள் அலுவலகம் செல்லும் வழியில் நடந்த விபத்தில் கண்ணன் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டான். கண்ணனின் வாழ்க்கை சிறிது நாள்கள் சக்கர நாற்காலியில் நகர்ந்தது. கவிதாவின் பணிவிடைகளில் கண்ணன் மனம் நிறைந்து இருந்தான். கண்ணனின் மனத் தராசில் கவிதா ஒரு புறமும் புவனா ஒரு புறமும் அமர்ந்தனர்.
கவிதா கொண்டிருந்த உண்மையான அன்பு என்ற தட்டு மிகவும் கீழே இறங்கி இருந்தது. உண்மையான அன்பு மட்டும் உயரத்தில் இருந்தது.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)