வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)

Su.tha Arivalagan
Sep 12, 2026,04:49 PM IST

- பூரணவள்ளி சேகர்


கவிதா  தன் வீட்டின்  அருகிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிகிறாள்.


மிகவும் சுறுசுறுப்பாக இருப்பாள். நோயாளிகளிடம் அன்பாகவும் மிகவும் நிதானமாகவும் பேசுவாள். அவள் அணிந்து வரும்  வெள்ளை ஆடை மிகவும் தூய்மையானதாக இருக்கும். அவளின் ஆடை போன்றே அவளின் மனதும் வெளுத்திருந்தது.


மருத்துவமனையின் அருகில்  கண்ணன்  ஒரு சிறு கடை போட்டு இளநீர் வியாபாரம் செய்து வந்தான். அந்தி சாயும் நேரத்தில் கடையை அடைத்து விட்டு வந்து விடுவான். ஒரு நாள் வீடு திரும்பும் போது தனக்குள் ஏதோ தடுமாற்றம் ஏற்படுவதைக் கண்ணன் உணர்ந்தான்.




கவிதா பகல் நேரப் பணி முடிந்து வீடு திரும்பும் போது தன்னை யாரோ பின் தொடர்வதாக உணர்ந்தாள். சற்றே லேசாகத் திரும்பிப் பார்த்த போது கண்ணனைப் பார்த்தாள். கவிதாவின் வீட்டிலிருந்து மூன்றாவது வீடுதான் கண்ணனின் வீடு.   அந்த நிகழ்வைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டாள்.


அடுத்தடுத்த நாட்களிலும் அதே நிகழ்வு தொடர்ந்தது.  அதனால்  எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் கவிதாவிற்கே கோபம் தலைக்கேறியது. சற்றே  யோசித்த கவிதா நேரடியாகக் கடந்த சில நாட்களாக ஏன் என்னைப் பின் தொடர்ந்து வருகிறாய் என்று கோபத்துடன் கேட்டாள்.


இதைக் கேட்ட கண்ணன் மிகவும் நிதானமாக கவிதா கோபம் வேண்டாம். எனக்கு சில நாட்களாகவே மாலை நேரத்தில் பார்வை சற்று குறைவதாக உணர்கிறேன் கவிதா.  மாலை நேரத்தில் உன் வெள்ளை ஆடை எனக்கு முன்னால் சென்று  சிறிதளவு ஒளி தருவது போல் இருக்கிறது. மருத்துவமனையில் அதற்காக மருத்துவமும் எடுத்துக் கொள்கிறேன் சகோதரி என்று அன்புடன் கூறினான்.


எனக்கு முன்னால் சென்று எனக்கு வழிகாட்டும் தேவதை  நீ கவிதா என்று கூறினான். தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று விளக்கினான். அதைக் கேட்ட கவிதா தன் வெண்மை நிற ஆடையின் அருமையை  மேலும் உணர்ந்ததுடன்  வழிகாட்டும் தேவதையாக ஒளிர்ந்தாள்.


(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)