பிரதிபலன்
- பூரணவள்ளி சேகர்
கண்ணனும் கவிதாவும் தன் இரு குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
அவர்களின் மகன் கவின் மிகவும் அமைதியானவன். எந்த ஒரு செயலையும் நிதானமாகக் கையாள்வான்.
மகள் தன்யா எப்போதும் துறுதுறுவென இருப்பாள்.
மிகவும் அன்பான குடும்பம். கண்ணன் அரசாங்கத் துறையில் அமைச்சுப் பணியாளராக இருந்தார். கிடைக்கும் வருமானத்தில் குழந்தைகளையும் பொறியாளர் படிப்புப் படிக்க வைத்தார்.
கவிதாவும் மிகவும் சிக்கனமானவள். சிறுசேமிப்பாக சேமித்து வைத்திருந்தாள்.
நல்ல மாப்பிள்ளை கிடைத்தவுடன் தம் மகளுக்கு 20 சவரன் நகை போட்டு சிறப்பாகத் திருமணம் செய்து வைத்தனர். மகள் பெங்களூருவில் செட்டில் ஆகி விட்டார். தன் மகனுக்கும் நல்ல மணப்பெண் தேடியபோது அவர்களின் தூரத்து உறவினர் மூலம் கிடைத்த பெண் தான் கனிகா. சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து தன் பாட்டியின் கண்காணிப்பில் வளர்ந்த பெண்.
கனிகாவை அனைவருக்கும் பிடித்த நிலையில் எவ்வித சீர்வரிசைகளும் கேட்காமல் திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தாள் கவிதா. தம் மகள் இல்லாத குறையைக் தம் மருமகள் தீர்த்ததாக நினைத்து மகிழ்ந்தார்கள் இருவரும்.
கண்ணனுக்கு ஏற்பட்ட மாரடைப்பால் இவ்வுலகிலிருந்து விடை பெற்றார் கண்ணன்.
கவின் தன் மனைவியுடன் சென்னையில் குடியேற, தான் மட்டும் சென்னையில் இருந்தாள் கவிதா. மகன் மகள் மற்றும் மருமகளுடன் அலைபேசியில் மட்டும் பேசி மகிழ்ந்தாள் கவிதா.
நாள்கள் செல்லச் செல்ல அலைபேசி உரையாடலும் குறைந்தது. ஏறக்குறைய மகனும் மகளும் கவிதாவை மறந்தே விட்டார்கள்.
கவிதா பேச முற்படும் போதெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியது. மிகவும் மனம் நொந்து இருந்தாள் கவிதா.
அவள் நலிவுற்றபோது கூட பிள்ளைகள் வரவில்லை. பக்கத்து வீட்டில் இருந்த ராணி தான் கவிதாவின் ஒரே துணை. எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்தாள் ராணி.
அவளுக்கு ஏற்பட்ட கடன் பிரச்சனையின் போது தன் இரண்டு சவரன் தங்க சங்கிலியைக் கொடுத்து உதவினாள் கவிதா. ராணியைத் தன் மகளாகவே பாவித்தாள் கவிதா.
உடல்நலிவுற்று இறந்த செய்தி கேட்டு மகனும் மகளும் வந்து சேர்ந்தனர். காரியங்கள் முடிந்தபின் கவிதா குடியிருந்த வீட்டை விற்று இருவரும் பிரித்துக் கொள்வோம்.அம்மாவின் இரண்டு சவரன் தங்க சங்கிலியையும் பிரித்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.
அம்மாவின் பெட்டியைத் திறந்து பார்த்த போது அதில் நன்கு ஒட்டப்பட்ட ஒரு கவர் இருந்தது. அவர்கள் இருவரும் தங்க சங்கிலியைத் தேடினர். கிடைக்காத பட்சத்தில் கவரைப் பிரித்துப் படித்தனர்.
தனக்குப் பணிவிடை செய்த ராணிக்கு தங்கச் சங்கிலியையும். தன் பெயரில் இருந்த சிறிய வீட்டையும் சுயமாக முழு மனதுடன் தானம் வழங்கியதாகப் பதிவு செய்து இருந்தாள் கவிதா. ராணி பெயரில் பதித்த பத்திர நகலும் இருந்தது.
அவரவர் செய்த செயலுக்கான பிரதிபலன் கிடைத்தது.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)