பூவரசு இலை பூரணக் கொழுக்கட்டை.. வரலாறு கூறும் சமையல் (பகுதி 2)
- பாவை. பு
பழங்கால மக்களுக்கு ஆவியில் வேகவைத்த உணவே பிரதானமானது. முக்கியமாக கிழங்கு வகைகள், காய்கறிகள், தினை, வரகு, சாமை, மூங்கிலரசி போன்றவைகளை அவர்கள் வேக வைத்தே உண்டார்கள். அது தான் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக இருந்தது.
எண்ணெய் வகைகள் அறிமுகமானபிறகு தான் உணவு முறையில் முற்றிலும் மாற்றம் ஏற்பட்டது. முதலில் பயன்பாட்டிற்கு வந்தது நல்லெண்ணெய், பிறகு தேங்காய் எண்ணெய்.
கடலை எண்ணெயோ தென் அமெரிக்கா வில் இருந்து வந்தது.
இந்த எண்ணெய்களை பயன்படுத்தி வந்த வரை உடலக்கு எந்த பாதிப்பும் பெரியதாக இல்லை...
ஆனால் தேங்காய் எண்ணெய் சாப்பிட்டால் மாரடைப்பு வரும்,கடலை எண்ணெய் சாப்பிட்டால் கொழும்பு கூடும் என்று பலம் பொருந்திய நிறுவனங்கள் பிரச்சாரம் செய்ய,நாமும் அதை உண்மை என்று நம்பியதன் விளைவாக இன்று டன் கணக்கில் அவர்களிடம் இருந்து பாமாயிலையும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயும் வாங்குகிறோம்.
பாமாயில், sunflower oil, ஆலிவ் ஆயிலில் மாற்று எண்ணெயை கலப்படம் செய்கிறார்களாம், ரசாயனம் மூலம் தெரியாதவாறு அதை சரியும் செய்கிறார்களாம். இதை தொடர்ந்து பயன்படுத்தும் போது நேரடியாக ஈரலை பாதிக்கிறது என்கிறார்கள். ரத்த அழுத்தம் ஏற்பட்டு ரத்த குழாய்களை அடைத்து பாதிப்பு இதயம் வரை செல்கிறது.
இந்த பிரச்சனைகள் பெரிதாக இல்லா அந்த கால உணவு முறைகளில் கொழுக்கட்டை பிரதானமான ஒன்று. அதுவும் இனிப்பு பூரண கொழுக்கட்டை பாரம்பரிய மிக்க நம் கலாச்சாரத்தோடு ஒன்றிய பதார்த்தங்களில் அதாவது பண்டிகை காலத்தின் நெய்வேத்தியமாக உள்ளது.
பூரண கொழுக்கட்டை என்றாலே தென்னிந்தியாவில் கடலைப் பருப்பு கொண்டு செய்யப்படுவது தான் பிரதானம், அடுத்தது தான் தேங்காய் பூரணம் மற்றவையெல்லாம்.
உலகளவில் இந்தியாவில் தான் அதிகளவில் கடலைப்பருப்பு பயிரிடப்படுகிறது. இந்த கடலைப்பருப்பு கொண்டைக்கடலை யில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. வங்காள பகுதிகளில் பரவலாக பயிடடப்பட்டதால் இதற்கு Bengal gram எகவும், இந்தியில் chana dal எனவும் கூறுகிறார்கள்.
கருப்பு வெள்ளை இரண்டு நிறங்களில் கொண்டைக்கடலை கிடைக்கிறது. இதில் அதிக சத்துக்களை கொண்டது கருப்பு கொண்டைக்கடலை தான். கொண்டைக்கடலையை நன்கு காயவைத்து தோல் எடுத்தால் கடலைப்பருப்பு, பாத்திரத்தில் உப்பை சூடாக்கி அதில் கொண்டைக்கடலையை சேர்த்து வறுத்து எடுத்தால் உப்புக்கடலை, இதையே உடைத்து எடுத்தால் பொட்டுக்கடலை (அதாவது உடைத்த கடலை). இதுவே கொண்டைக்கடலையின் பரிணாமங்கள்.
கொண்டைக்கடலையில் ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை தடுக்கிறது, புரதம் வைட்டமின்களும் உள்ளது, இதய நோய்களை சீராக்கிறது,செரிமான பிரச்சனைகளை சரிசெய்கிறது, சைவ உணவு மட்டும் உண்பவர்களுக்கு சிறந்த மாற்று உணவு.
விநாயகர் சதுர்த்தி என்றதுமே நம் ஞாபகத்திற்கு வருவது கொழுக்கட்டை தான் உலகமுழுவதும் உள்ள இந்தியர்களால் கொழுக்கட்டை செய்து கொண்டாடப்படுகிறது. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளில் போகி அன்றும் கொழுக்கட்டை செய்து படைப்பது வழக்கத்தில் உள்ளது.
வாங்க கடலைப்பருப்பு பூரணக்கொழுக்கட்டை சுவைக்கலாம்
தேவையான பொருட்கள்
கொழுக்கட்டை மாவு -1கப்
தண்ணீர்-கொதிக்கவைத்தது -1 1.5 கப்
உப்பு-தேவைக்கேற்ப
எண்ணெய்- 1ஸ்பூன்
பூரணம் செய்ய தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு- 1/2 கப்
தேங்காய் துருவல்- 1கப்
வெல்லம்-1/2 கப்
ஏலக்காய் தூள்- சிறிதளவு
செய்முறை
வாணலியில் தண்ணீர் எண்ணெய் உப்பு போட்டு கொதித்ததும் மாவு சேர்த்து கிளறி ஆறியதும் கையால் சாப்டாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பூரணத்திற்கு வெல்லத்தை பாகு காச்சி அதில் வேகவைத்த கடலைப்பருப்பு தேங்காய் துருவல் ஏலக்காய் பொடி சேர்த்து கெட்டியானதும் இறக்கி விடவும். பூவரசு இலை, வாழையிலை,அல்லது அசிகளிலோ கொழுக்கட்டை தட்டி பாத்திரத்தில் வேகவைத்து எடுக்கவேண்டும்.
கிராமங்களில் பழமை மாறாமல் பூவரசு இலையிலேயே இன்றைக்கும் கொழுக்கட்டை செய்கிறார்கள் சுவையும் வாசமும் ஊரே மணக்கும்.