பீகார் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யுங்க...சுப்ரீம் கோர்ட்டில் பிரசாந்த் கிஷோர் மனு

Su.tha Arivalagan
Feb 05, 2026,03:54 PM IST

டில்லி : பிரசாந்த் கிஷோரின் ஜன சூராஜ் கட்சி (Jan Suraaj Party), பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்து முறைகேடாக இந்த தேர்தல் வெற்றி பெறப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.


2025ம் ஆண்டு நவம்பர் மாதம் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் நிதிஷ்குமாரின் ஐக்கிய தளம் கட்சி, பாஜக.,வுடன் கூட்டணி வைத்து அதிக இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பீகார் முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில், பிரசாந்த் கிஷோரால் தொடங்கப்பட்ட ஜன சூராஜ் கட்சி, 2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளது.




தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது, பீகார் அரசு தேர்தல் ஓட்டுப்பதிவிற்கு முன்னதாக 'முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்' (Mukhyamantri Mahila Rojgar Yojana) கீழ் சுமார் 1.21 கோடி பெண்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கியதாக ஜன சூராஜ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்தத் தொகையை வாக்காளர்களுக்குக் கொடுக்கப்பட்ட "அதிகாரப்பூர்வ லஞ்சம்" என்று பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். ஜேடியு (JDU) மற்றும் பாஜக (BJP) கூட்டணி, இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களின் வாக்குகளைக் கவர்ந்து முறைகேடாக வெற்றி பெற்றுள்ளதாக அவர் கூறுகிறார்.


இந்தத் திட்டத்திற்காக சுமார் 14,000 கோடி ரூபாய் உலக வங்கி நிதியை பீகார் அரசு மடைமாற்றியதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் ஆணையம் இது குறித்து நடவடிக்கை எடுக்கத் தவறியதால், தேர்தலை ரத்து செய்துவிட்டு, முறைகேடுகள் இல்லாத புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்று ஜன சூராஜ் கட்சி உச்ச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளது. இந்த மனுவை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜோய்மால்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு விரைவில் விசாரிக்க உள்ளது. 


பீகார் சட்டசபை தேர்தல் முடிந்து மூன்று மாதங்களுக்கு பிரசாந்த் கிஷோர் இப்படி ஒரு புயலை கிளப்பி உள்ளது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் கடைசி நிமிடத்தில் தான் போட்டியிடவில்லை என தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பின் வாங்கினார். இருந்தாலும் அவரது ஜன சூராஜ் கட்சி கணிசமான ஓட்டுக்களை பெற்று, காங்கிரசின் படுதோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.