தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: தேமுதிகவிற்கு அனைத்து கட்சியினரும் தோழமை கட்சிகள் தான். தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கூட்டணி குறித்து அதிகார பூர்வமாக அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், தேமுதி இன்னும் கூட்டணி குறிந்த எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகத்தை, சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரமும், தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும், புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும். தனித்தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.5 ஆயிரம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை 12ம் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பதில் அளிக்கையில், தேமுதிக சார்பில் 2026 தேர்தலுக்கான விருப்ப மனு இன்று தலைமை அலுவலகத்தில் தொடங்கி உள்ளது. வரும் 12ம் தேதி வரை விருப்ப மனு வாங்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாங்கப்படும். உரிய நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்போம். எங்கள் மாவட்ட செயலாளர் நிர்வாகிகள் யாருடன் இந்த முறை கூட்டணி வைக்க வேண்டும் என சொல்கிறார்களோ அந்த கூட்டணியில் தான் வைப்போம்.
தேமுதிகவின் எதிர்காலத்திற்கு எது நல்லதோ அந்தக் கூட்டணி முடிவு செய்வோம். யூகங்களுக்கு பதில் சொல்வது கிடையாது. தேமுதிகவிற்கு அனைத்து கட்சியினரும் தோழமை கட்சிகள் தான். தேமுதிக இடம்பெறக்கூடிய கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கூட்டணி குறித்து அதிகார பூர்வமாக அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.