திமுகவுக்கு நன்றி.. 2026 தேர்தலையொட்டி எங்களது நகர்வுகள் இருக்கும்.. பிரேமலதா பரபரப்பு பேட்டி

Su.tha Arivalagan
Jun 01, 2025,02:39 PM IST
சென்னை: கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை வரவேற்கிறோம். 2025 தேர்தலையொட்டி எங்களது அரசியல் நகர்வுகள் இருக்கும் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக எப்படியும் தங்களுக்கு ஒரு சீட் தரும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் தேமுதிக இருந்து வந்தது. அந்த சீட்டில் தனது மகன் விஜய பிரபாகரன் அல்லது தம்பி சுதீஷ் ஆகியோரில் ஒருவரை நிறுத்தவும் பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதிமுக தரப்பில் தேமுதிகவுக்கு இப்போது சீட் தர விருப்பம் இல்லை. அதற்குப் பதில் 2026 சட்டசபைத் தேர்தலுக்குப் பின்னர் தரலாம் என்று அதிமுக கருதியது. அதையே தேமுதிகவிடமும் தெரிவித்து விட்டது. இரு ராஜ்யசபா வேட்பாளர்களையும் அதிமுக அறிவித்து விட்டது.



இந்த நிலையில் அதிமுகவின் முடிவு குறித்து அதிடியான கருத்தை வெளியிட்டுள்ளார் பிரேமலதா விஜயகாந்த். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, முதலில் மதுரை திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அதை மனதார வரவேற்கிறோம், நன்றி சொல்கிறோம். கேப்டன் மறைந்த சமயத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் நேரில் வந்திருந்தனர். அதை மறக்க மாட்டோம்.

இன்று  ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக 2026 ராஜ்யசபா தேர்தல் சமயத்தில் எங்களுக்கு ஒரு சீட் தருவதாக அதிமுக அறிவித்துள்ளது. ஏற்கனவே எங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக அதிமுக ஒப்புக் கொண்டுள்ளது. இதைத்தான் நாங்களும் சொல்லி வந்தோம். இப்போது 2026 தேர்தலில் தருவதாக அறிவித்துள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை எல்லா நகர்வுகளும் தேர்தலையொட்டியே உள்ளன என்பதால் எங்களது நகர்வுகளும் தேர்தலையொட்டியே இருக்கும். பார்க்கலாம். இன்னும் 6 மா காலமா பயணிக்கப் போகிறோம். எங்களது நகர்வுகளை அப்போது சொல்கிறோம் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.

இந்தப் பேட்டியின் மூலம் திமுக கூட்டணிக்குள் வர நாங்க ரெடி என்பதை பிரேமலதா மறைமுகமாக உணர்த்தியிருப்பதாக கருதப்படுகிறது. அதேபோல அதிமுகவுக்கும் செக் வைத்துள்ளதாகவும் கருதப்படுகிறது.

தேமுதிக முன்பு இப்போது 3 ஆப்ஷன்கள் உள்ளன. ஒன்று திமுக பக்கம் போவது . 2வது தவெகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது. இரண்டும் சரிவராவிட்டால் அதிமுக பாஜக கூட்டணியில் நீடிப்பது. இதில் எது நடக்கப் போகிறது என்பதை வரும் மாதங்கள்தான் நிரூபிக்கும்.