மத்திய மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம்: பிரதமர் மோடி!
டெல்லி: மத்திய மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம் என பிரதமர் மோடி நிதி ஆயோக் கூட்டத்தில் பேசியுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு முதல் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டம் 10வது கூட்டமாகும். இந்த கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேச முதல்வர்கள், துணை நிலை கவர்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை கடந்த ஆண்டு புறக்கணித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்தாண்டு கலந்து கொண்டுள்ளார்.
டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் பேசுகையில், நாட்டின் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசுடன் மாநிலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மத்திய மாநில அரசுகள் ஓரணியாக செயல்பட்டால் எந்த குறிக்கோளையும் எட்டலாம். ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி அடையும் போது, தேசமும் வளர்ச்சி அடைந்ததாக மாறும்.
வளர்ச்சி அடைந்த பாரதமே, ஒவ்வொரு இந்தியரின் இலக்கு. இலக்கை நோக்கியே நாம் முன்னேற வேண்டும். இது தான் 140 கோடி பேரின் விருப்பம். ஒவ்வொரு மாநிலமும் குறைந்தது ஒவ்வொரு சுற்றுலா தலத்தையாவது சர்வதேச தரத்தில் உருவாக்க வேண்டும். இந்தியா வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் நகரங்களை நோக்கி நாம் பாடுபட வேண்டும். சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வரும் வகையில் நாம்பாடுபட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.