ஆடியிலே அலைமோதி ஆர்ப்பரிக்கும் காவிரியில்!

Su.tha Arivalagan
Aug 05, 2026,12:51 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


ஆடியிலே அலைமோதி 

ஆர்ப்பரிக்கும் காவிரியில்

குடும்பங்கள் கூடிவந்து 

கொண்டாடி மகிழுதம்மா


பதினெட்டு படி நிரம்பி 

பாய்ந்தோடும் காவிரியில்

பந்தங்கள் சேர்ந்து வந்து 

பரவசம் ஆகுதம்மா


படியிலே படையலிட்டு 

பழம் தேங்காய் உடைத்து வைத்து

பக்தியுடன் விளக்கேற்றி

புதுமணத் தம்பதிகள் 

புனித நீர் ஆடுதம்மா




மஞ்சளும் நூல் எடுத்து 

மங்களமாய் அதை நனைத்து

பெண்களுக்கு அணி சூட்டி 

பெருமிதம் காணுதம்மா


ஆடி பதினெட்டு 

ஆனந்தப் பெருநாளில்

அண்ணன் கையில் 

நூல் கட்டி அக்கா தங்கை 

கொண்டாட்டம்


பச்சரிசி சக்கரையை 

பாங்கோடு கலந்து

பரிமாறிக் கொண்டாடும் 

ஆடி பதினெட்டு

ஆற்றங்கரையில் 

ஆனந்தமாய்க் கொண்டாட்டம்


ஆட்டம் பாட்டம்

அனைவரும் கொண்டாடு

பாரெங்கும் நடக்கும் 

அது தான் நம் பண்பாடு


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)