உள்ளபடிக் குடிநீரும் உப்பும் தான் கரிக்குதே!

Su.tha Arivalagan
Aug 24, 2026,05:10 PM IST

- கவிஞர் பி.எஸ். முருகேசன்


காடு களனியெங்கும்

கருவ மொளச்சு கெடுக்குதே

ஆறு குளங்கள் எல்லாம் 

சாக்கடையா மிதக்குதே


நெனச்ச இடங்களிலே

நெகிழிகள் பறக்குதே 

மண்ணின் வளங்கள் எல்லாம் 

மாசுபட்டு போனதே


சுத்தம் சுகாதாரம் 

கேள்விக்குறி ஆனதே

உள்ளபடிக் குடிநீரும் 

உப்பும் தான் கரிக்குதே


காற்றிலே மாசு கலந்து 

கவலை அளிக்குதே

உணவிலே கலப்படம் 

உலகினில் உலவுதே




மதுவினால் மனித உயிர் 

மடிந்து தான் போகுதே

மரபணு மாற்றத்தால் 

உயிரினம் சாகுதே


விளையும் நிலம் 

வீடாக மாற்றி

விற்பனைக்கு போகுதே

விவசாயம் கேள்விக்குறியாக 

மாறித்தான் போனதே


எல்லாமே மாற்றம் என்று 

ஏமாற்றம் சொல்லுதே

எதை நம்பி வாழ்வது 

என்று மனம் 

ஏக்கத்துடன் ஓடுதே


ஓடுவதும் தேடுவதும் 

மாசு இல்லாத வாழ்க்கைக்கு என்று

அது மாறினால் மகிழ்ச்சி தான் நன்று


(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)