பாத்து பாத்து ஆசை அள்ள பரவசத்தில் மீசை துள்ள!
Aug 20, 2026,03:51 PM IST
- கவிஞர் பி.எஸ். முருகேசன்
கொலுசு சத்தம்
சல சலக்க
கூந்தல் மலர்
மணமணக்க
காந்தவிழி பார்வையிலே
கன்னியும் வந்தாள்
கலர் கலராய்
புடவையிலே மின்னியும் வந்தாள்
ஒத்த கல்லு மூக்குத்தியும்
ஒளிர விட்டு மூக்குல தான்
நாணல் போல உயரமாக
நங்கையும் நின்றாள்
நாணத்தோட மொகத்துலயும் புன்னகை தந்தாள்
பாத்து பாத்து
ஆசை அள்ள
பரவசத்தில் மீசை துள்ள
ஓசை இன்றி
ஆடவனும் ஓடியும் வந்தான்
கண் அசைவில்
காதல் வலை வீசியும் நின்றான்
கண்ணும் கண்ணும் பேசிக்கொள்ள
காதல் மனம்
ஆசை கொள்ள
காந்தம் போல
காதல் வானில்
சிறகடித்து பறந்து சென்றது
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)