அதிமுக மீது உண்மையான அக்கறை இருந்தால்.. திருமாவளவன் இதைச் செய்ய வேண்டும்.. புதுச்சேரி அன்பழகன்

Su.tha Arivalagan
Jul 17, 2025,04:46 PM IST

புதுச்சேரி: அதிமுக மீது உண்மையில் அக்கறையும் பாசமும் இருந்தால், திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேற வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.


செய்தியாளர்களிடம் இன்று பேசிய அன்பழகன் இதுகுறித்துக் கூறுகையில்,  தமிழக பிஜேபி மற்றும் அதிமுக கூட்டணியை தினந்தோறும் விமர்சித்து பேசும் திருமாவளவனுக்கு அதிமுக மீது உண்மையில் பாசமும் அக்கறை இருந்தால் திமுக கூட்டணியில் இருந்து அவர் முதலில் வெளியேற வேண்டும் என்றார்.


காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். அதேபோன்று யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஏன் ராகுல் காந்தி வலியுறுத்தவில்லை.




பெருந்தலைவர் காமராஜரின் எளிமையான வாழ்க்கையை கொச்சைப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவா பேசியிருக்கிறார் மறைந்த தலைவர்களை பற்றி பேசுவது என்பது மிகுந்த கண்டனத்திற்குரியது ஏற்றுக் கொள்ளக்கூடாது. 


பேரறிஞர் அண்ணாவை பாஜக விமர்சனம் செய்த போது உடனடியாக கூட்டணி இருந்து வெளியேறியது தான் அதிமுக. காமராஜர் பெயரை சொல்லி கட்சி  நடத்தும் காங்கிரஸ் கட்சியினர் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவார்களா. காமராஜரை இழிவுபடுத்திய திமுகவினரை கண்டிக்க திராணி இல்லாதவர்கள் தான் காங்கிரஸார். நாடாளுமன்ற உறுப்பினர் சிவா காமராஜர் பற்றி பேசிய இழிவான செயலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் அவர்.