2 முறை அரசாண்ட அதிமுகவுக்கு வெறும் 2 தொகுதிகள்தானா.. புதுச்சேரியில் புலம்பும் தொண்டர்கள்!

Su.tha Arivalagan
Mar 21, 2026,05:15 PM IST

புதுச்சேரி: புதுச்சேரியில் 2 முறை ஆட்சி புரிந்துள்ள அதிமுகவுக்கு, நேற்று பிறந்த லஜக கட்சியுடன் இணைத்து அதற்குச் சமமாக 2 தொகுதிகளைக் கொடுத்துள்ளதால் அதிமுகவினர் பெரும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளனராம்.


புதுச்சேரி  சட்டசபைத் தேர்தலில் என். ஆர். காங்கிரஸ், அதிமுக, பாஜக கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இக்கூட்டணியில் புதிதாக உதித்த லஜக கட்சியும் இணந்துள்ளது. இங்குதான் பிரச்சினை வெடித்துள்ளது.


புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை 2 முறை ஆட்சி செய்த வரலாற்றுப் பின்னணி கொண்ட அதிமுகவிற்கு தற்போதைய கூட்டணியில் வெறும் இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல லஜகவுக்கும் 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர். இதுதான் அதிமுகவினரை அதிர வைத்துள்ளது.




என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்கள், பாரதிய ஜனதா கட்சி 14 இடங்களில் போட்டியிடுகின்றன.


புதுச்சேரி அரசியலில் அதிமுகவிற்கு இருக்கும் நீண்டகால செல்வாக்கே இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகும். இப்பகுதியில் அதிமுக இரண்டு முறை (குறிப்பாக 1974 மற்றும் 1977-ல் எஸ். ராமசாமி தலைமையில்) ஆட்சியமைத்துள்ளது. 2011-ல் 5 இடங்களையும், 2016-ல் தனித்துப் போட்டியிட்டு 4 இடங்களையும் அக்கட்சி வென்றிருந்தது.


இருப்பினும், 2021 தேர்தலில் 5 இடங்களில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றி பெற முடியாத சூழல் ஏற்பட்டதால், அக்கட்சியின் பேரம் பேசும் சக்தி தற்போது அடிபட்டுப் போய் விட்டது. அதற்காக பாரம்பரியம் மிக்க இரட்டை இலைச் சின்னத்தை அவமதிப்பது போல வெறும் 2 தொகுதிகள் கொடுப்பது நியாயமே இல்லை என்று அதிமுகவினர் ஆதங்கப்படுகிறார்கள்.


அதிமுகவினரின் ஆதங்கத்தை உணர்ந்து கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா அல்லது சமரசப்படுத்தி தேர்தலை சந்திப்பாரா என்.ரங்கசாமி என்பது மில்லியன் டாலர் கேள்வியாக எழுந்துள்ளது.