புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தல் 2026: இன்றுடன் பிரச்சாரம் ஓய்கிறது
டில்லி : புதுச்சேரி, அசாம், கேரளா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதனால் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக இருந்து வருகிறார். நடப்பு சட்டசபையின் பதவிக்காலம் இந்த ஆண்டு ஜூன் 15ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. அதற்கு முன்பாக சட்டசபை தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ள தேர்தல் கமிஷன், கடந்த மாதம் புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கான தேதியை அறிவித்தது. இதன் படி, வரும் ஏப்ரல் 09ம் தேதி புதுச்சேரியில் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வேட்புமனு தாக்கல் மார்ச் 16ம் தேதி துவங்கி, 21ம் தேதி வரை நடைபெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் மார்ச் 24ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது. புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. வழக்கம் போல் திமுக-காங்கிரஸ் கூட்டணி வைத்து புதுச்சேரி சட்டசபை தேர்தலை சந்திக்கின்றன. இந்த முறை புதிய வரவாக விஜய்யின் தவெக, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இதில் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய 2 தொகுதிகளை கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கட்சிக்கு தவெக ஒதுக்கி உள்ளது.
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்களும் புதுச்சேரி தேர்தலுக்கான தங்களின் பிரச்சாரத்தை நிறைவு செய்து விட்டார்கள்.ஓட்டுப்பதிவு நடைபெறும் தேதிக்கு 48 மணி நேரத்திற்கு முன் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்பது தேர்தல் நடைமுறை. அதன்படி ஏப்ரல் 09ம் தேதி புதுச்சேரி, கேரளா, அசாம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால், ஏப்ரல் 07ம் தேதியான இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.
இந்த 3 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 09ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இவற்றில் பதிவாகும் ஓட்டுக்கள், தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் சட்டசபை தேர்தல் நிறைவடைந்த பிறகு மே 04ம் தேதியன்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும்.