இட்டுனு வந்து இட்டுனு போறது கஷ்டம்.. தி.நகர் தொகுதியில் திரில் வெற்றியைப் பெற்ற புஸ்ஸி ஆனந்த்!

Su.tha Arivalagan
May 04, 2026,04:19 PM IST

சென்னை: படு எதார்த்தமாக பேசக் கூடிய புஸ்ஸி ஆனந்த், சென்னை தி.நகரில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த புஸ்ஸி ஆனந்த், தமிழ்நாட்டு அரசியலில் விஐபி தலைவராக இதன் மூலம் உருவெடுத்துள்ளார்.


தமிழக அரசியல் மற்றும் திரைத்துறையில் மிக முக்கியமான பெயர்களில் ஒன்றாக புஸ்ஸி ஆனந்த் உருவெடுத்துள்ளார். குறிப்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் வலது கரமாக அறியப்படும் புஸ்ஸி ஆனந்த், தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரியைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் என். ஆனந்த். புதுச்சேரியில் உள்ள புஸ்ஸி வீதிபகுதியில் வசித்ததால், அந்த இடத்தின் பெயரே இவருக்கு அடையாளமாக மாறி புஸ்ஸி ஆனந்த் என்று அழைக்கப்படுகிறார். 




அரசியலில் இவருக்கு நீண்ட கால அனுபவம் உண்டு. 2006-ஆம் ஆண்டு புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் என். ரங்கசாமியின் ஆதரவுடன் சுயேச்சையாகப் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இவர், விஜய்யின் ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்கு வகித்தார்.  விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்தார். காலப்போக்கில், விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.


தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ரசிகர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து, அவர்களைச் சமூகப் பணிகளில் ஈடுபட வைத்தார். விஜய்க்குத் தேவையான அடித்தளத்தை அமைத்தவர் இவர்தான். கடுமையாக உழைத்துள்ளார். விஜய்க்கு பல காரியங்களை எளிதாக்கிக் கொடுத்தவரும் ஆனந்த்தான்.


விஜய் தனது அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியபோது, அதன் நிர்வாகப் பணிகளில் புஸ்ஸி ஆனந்த் மிக முக்கியமான பொறுப்பை ஏற்றார். கட்சியின் உட்கட்டமைப்பை உருவாக்குவது, மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது மற்றும் கட்சியின் மாநாடுகளை முன்னின்று நடத்துவது என விஜய்யின் நிழலாகவே இவர் செயல்பட்டு வருகிறார்.


அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர் மட்ட நிர்வாகிகள் வரை அனைவரிடமும் நேரடித் தொடர்பில் இருப்பார். படு இயல்பாக பேசுவார். விஜய்யை இட்டுனு வந்து இட்டுனு போறதுதான் கஷ்டம் என்று இவர் ஒரு மேடையில் பேசியது பலராலும் ரசிக்கப்பட்டது. 


விஜய்யின் நம்பிக்கைக்குரிய மனிதராகப் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவது இவரது பலமாகக் கருதப்படுகிறது. ரத்த தான முகாம்கள், அன்னதானம் மற்றும் கல்வி உதவித் திட்டங்களை ஒருங்கிணைப்பதில் இவர் தீவிரமாகச் செயல்படுகிறார். 


விஜய்யின் அரசியல் பயணத்தில் புஸ்ஸி ஆனந்த் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறார். ஒரு சாதாரண ரசிகராகத் தொடங்கி, இன்று ஒரு மாநிலக் கட்சியின் முக்கியத் தூணாக உயர்ந்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு பயணமாகும். இப்போது தமிழ்நாட்டு அரசியல் தலைவராக, விஜய்யுடன் இணைந்து சட்டசபையிலும் புஸ்ஸி ஆனந்த் செயல்படவிருப்பது பலரையும் இவர் மீதான பார்வையை கூராக்கியுள்ளது.