விழாக்கோலம் பூண்ட புதுச்சேரி.. சீக்கிரமே வந்து விஜய்.. பேச்சைக் கேட்க திரண்ட தவெக தொண்டர்கள்!
புதுச்சேரி: தவெக தலைவர் விஜய் இன்று புதுச்சேரியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசவுள்ளதால் அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டுள்ளனர். விஜய்யும் இதுவரை இல்லாத அளவு திட்டமிட்ட நேரத்துக்கு முன்பே வந்து விட்டார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், கரூர் சம்பவத்திற்குப் பின்னர் முதல் முறையாக பொது வெளியில் தொண்டர்களைச் சந்திப்பது இதுவே முதல் முறை என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. அதேசமயம், புதுச்சேரியில் அவர் தொண்டர்களைச் சந்திக்க முடிவு செய்ததும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி உப்பளம் பகுதியில் இதற்காக பிரத்யேக பொதுக்கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தக் கூட்டத்திற்கு 5000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். க்யூ ஆர் கோட் மூலம் அழைப்பிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே இதில் பங்கேற்க முடியும். மேலும் 11 வகையான கட்டுப்பாடுகளையும் காவல்துறை விதித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து தொண்டர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதும் அதில் முக்கியமான கட்டுப்பாடு ஆகும்.
வழக்கம் போல குழந்தைகள், வயதானவர்கள் கூட்டத்திற்கு வரக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்ப்பிணிகளுக்கும் வரக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் புதுச்சேரியில் இன்று உரையாற்றவுள்ளார் விஜய். அவரது பேச்சு எப்படி இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் விஜய்க்கு தெளிவான எதிரியாக திமுக உள்ளது. ஆனால் புதுச்சேரியில் அப்படி யாரும் இல்லை. முதல்வர் ரங்கசாமியுடன் விஜய்க்கு நல்ல நட்பு உள்ளது. இரு கட்சிகளும் கூட்டணி வைத்துப் போட்டியிடப் போவதாகவும் ஒரு தகவல் உண்டு. அதேசமயம், அங்கு திமுக பெரிய அளவில் பலமாக இல்லை. பாஜகவையும் விஜய் பகிரங்கமாக எதிர்ப்பாரா என்று தெரியவில்லை. காரணம், கரூர் விவகாரத்தில் பாஜகதான், விஜய்க்கு பக்க பலமாக இருப்பதாக ஒரு பேச்சு உள்ளது. எனவே விஜய், புதுச்சேரியில் என்ன மாதிரியான உத்தியை கையில் எடுத்துப் பேசுவார் என்று தெரியவில்லை.
அதேசமயம், புதுச்சேரியிலும் திமுகவைத்தான் விஜய் சாடிப் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.