ஹலோ மும்பை இந்தியன்ஸ்.. முதல்ல கேப்டனை மாத்துங்க.. ஆர்.அஸ்வின் வார்னிங்!

Su.tha Arivalagan
Mar 24, 2026,10:39 AM IST

சென்னை: ஐபிஎல் 2026 சீசனுக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் சில முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.


இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் இருந்து, உலகக் கோப்பையை வென்று கொடுத்த பிறகும், மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் கேப்டனாக நியமிக்கப்படாதது ஆச்சரியமாக இருப்பதாக அஸ்வின் கூறியுள்ளார்.


சூர்யகுமார் யாதவை கேப்டனாக்குவது மிகவும் எளிமையான மற்றும் சரியான முடிவாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 




தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்ட்யா உள்ளார். அவரது கேப்டன்சி குறித்து அஸ்வின் சற்று அதிருப்தி தெரிவித்துள்ளார். பாண்டியா ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து தனது திறமையை நிரூபித்தவர் தான். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் அவர் வந்த பிறகு ரோஹித் சர்மா தொடர்பான சர்ச்சைகளால் கடந்த ஆண்டு அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.


தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக சூர்யகுமார் இருக்கும் நிலையில், அவருக்குக் கீழே பாண்டியா மும்பை அணியில் கேப்டனாக இருப்பது ஒரு சவாலான சூழலை உருவாக்கும் என்று அஸ்வின் கருதுகிறார். இது ஹர்திக் பாண்டியாவின் மனநிலையைப் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


ஹர்திக் பாண்டியாவிடம் கேப்டன்சித் தகுதிகள் இருந்தாலும், தற்போதைய சூழலில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக்காதது சற்று கவலையளிக்கும் விஷயம் என்று அஸ்வின் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதேசமயம், நிர்வாகம் மற்றும் வீரர்களின் முழு ஆதரவு இருந்தால் ஹர்திக் பாண்டியாவால் இந்தச் சூழலையும் சிறப்பாகக் கையாள முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.