டெல்லியில் டிஜிபி அலுவலகம் முன்பு ராகுல் காந்தி திடீர் தர்ணா போராட்டம்

Su.tha Arivalagan
Aug 21, 2026,01:24 PM IST

டெல்லி : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி, டெல்லியில் உள்ள காவல் துறை துணை ஆணையர் (DCP) அலுவலகம் மற்றும் நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தின் முன்பாக திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


போராட்டத்திற்கான பின்னணி :


சமீபத்தில் டெல்லியில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் பலவும் வலியுறுத்தி வந்தன. இருந்தும் இது தொடர்பாக போலீசார் தரப்பில் முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என சொல்லப்படுகிறது.


பெல்லட் குண்டு தாக்குதலில் (Pellet Gun Attack) பாதிக்கப்பட்ட நபர் தொடர்பான வழக்கில், காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்ய மறுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் நியாயம் கேட்ட போதும், அலட்சியமாகச் செயல்பட்ட காவல்துறையினர் மீது உடனடியாக வழக்குப்பதிவு (FIR) செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவும் ராகுல் காந்தி நேரடியாக நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்கு நேரில் சென்று மனு அளிக்க முயன்றார்.


காவல் ஆணையர் அலுவலகம் முன் தர்ணா:




காவல்துறையின் தரப்பில் உரிய பதில் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படாததை அடுத்து, காவல் துறை துணை ஆணையர் அலுவலகம் முன்பாக ராகுல் காந்தி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் நேரடியாகக் காவல் நிலைய வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவம், டெல்லி அரசியலில் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.


பாதிக்கப்பட்ட சாமானிய மக்களுக்கு நீதி கிடைக்காத பட்சத்தில், காவல்துறை நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்பதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டம் அமைந்ததாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.