தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
டெல்லி: பாஜக நடத்தும் தேர்தல் முறைகேடுகளுக்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது. பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடத்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டியுள்ளார்.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 வருடங்களில் சேர்க்கப்பட்டதை விட தேர்தலுக்கு 5 மாதத்திற்கு முன்பு ஏராளமான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையே சுமார் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பீகார் வாக்காளர் பட்டியலில் முறைகேடு உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வேறு மாதிரி இருந்தாலும், தேர்தல் முடிவு பாஜகவிற்கு சாதகமாக உள்ளது. மகாராஷ்டிரத்தில் தேர்தலில் மாலை 5:30 மணிக்குப் பிறகு வாக்குப்பதிவு அதிகரித்தது.
மென்பொருள் மூலம் ஆய்வு செய்யக்கூடிய வகையில் வாக்காளர் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது. தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. வாக்காளர் பட்டியல் விவரங்களை பகிர தேர்தல் ஆணையம் மறுக்கிறது. தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது.
ஒரு நபருக்கு 4 பூத்துகளில் பெயர்கள் உள்ளன. சில வாக்காளர்களின் பெயர்கள் பல்வேறு மாநிலங்களின் வாக்குச்சாவடிகளில் இடம் பெற்றுள்ளன. வீட்டு எண் பூஜ்ஜியம் என பல வாக்காளர்களின் விலாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல வாக்காளர்களுக்கு புகைப்படங்கள் பதிவு செய்யப்படவில்லை. அடையாளம் காணும்படி இல்லை. ஒரே படுக்கை அறை கொண்ட வீட்டில் மட்டும் 48 வாக்காளர்கள் உள்ளனர். கர்நாடகாவின் மஹாதேவபுரா பகுதியில் கிட்டத்தட்ட 12,000 போலி வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் விவரங்களை நாங்கள் ஆய்வு செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் கூறுகிறது என்று தெரிவித்துள்ளார்.