அடுத்த மேட்ச் பிக்சிங் பீகாரில் தான்.. பாஜக, தேர்தல் ஆணையம் மீது பாயும் ராகுல் காந்தி
டெல்லி: லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாஜக தேர்தல் மோசடியில் ஈடுபடுவதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு மகாராஷ்டிரா தேர்தலில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டி, வரவிருக்கும் பீகார் தேர்தலிலும் பாஜக இதேபோன்ற "மேட்ச்-ஃபிக்ஸிங்" நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று எச்சரித்துள்ளார். தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் இருந்து, போலியான வாக்காளர்களைச் சேர்ப்பது, வாக்குப்பதிவு சதவீதத்தை உயர்த்துவது, குறிப்பிட்ட இடங்களில் மோசடி செய்வது, ஆதாரங்களை மறைப்பது வரை பாஜக திட்டமிட்டு ஜனநாயகத்தை திருடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பாஜக தோல்வியைத் தவிர்க்க இப்படிச் செய்ததாகவும், இது பீகாரிலும் தொடரலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) மோசடியானவை என்று மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியிருந்த நிலையில், தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி கூறுகையில், போலியான வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கிறது. வாக்குப்பதிவு சதவீதத்தை செயற்கையாக அதிகரிக்கிறது. பாஜகவுக்கு வெற்றி தேவைப்படும் இடங்களில் மட்டும் குறிவைத்து மோசடி வாக்குகளைச் சேர்க்கிறது. இறுதியாக, இந்த மோசடிக்கான ஆதாரங்களை அழிக்கிறது. மகாராஷ்டிராவில் பாஜக ஏன் பதட்டமாக ஆக இருந்தது என்பது எளிதில் புரிகிறது. ஆனால், மோசடி என்பது match-fixing போன்றது.
ஏமாற்றும் அணி ஒருவேளை ஆட்டத்தில் வெற்றி பெறலாம். ஆனால், அது அமைப்புகளை சேதப்படுத்தி, மக்களின் நம்பிக்கையை அழித்துவிடும். சம்பந்தப்பட்ட இந்தியர்கள் அனைவரும் ஆதாரங்களைப் பார்க்க வேண்டும். அவர்களாகவே தீர்மானிக்க வேண்டும். பதில்களைக் கேட்க வேண்டும். ஏனென்றால், மகாராஷ்டிராவில் நடந்த match-fixing அடுத்து பீகாருக்கு வரும். பிறகு பாஜக எங்கு தோற்கிறதோ அங்கெல்லாம் வரும். Match-fixed தேர்தல்கள் ஜனநாயகத்திற்கும் விஷம் என்று ராகுல் காந்தி மேலும் கூறினார்.
எதிர்க்கட்சிகள் மகாராஷ்டிரா தேர்தலில் நடந்ததாகக் கூறப்படும் தேர்தல் முறைகேடுகள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) "மோசடி" என்றும், அது எதிர்க்கட்சிகளுக்கு "பாதகமாக" இருப்பதாகவும் கூறி, வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆனால், தேர்தல் ஆணையம் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. மகாராஷ்டிரா தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்தது "சாதாரணமானதே" என்று கூறியுள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், "மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை 6,40,87,588 வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு சுமார் 58 லட்சம் வாக்குகள் பதிவாகின. இந்த சராசரி போக்குகளின்படி, கடைசி இரண்டு மணி நேரத்தில் சுமார் 116 லட்சம் வாக்காளர்கள் வாக்களித்திருக்கலாம். எனவே, இரண்டு மணி நேரத்தில் 65 லட்சம் வாக்குகள் பதிவானது சராசரி மணி நேர வாக்குப்பதிவு விகிதத்தை விட மிகவும் குறைவு" என்றார்.
மேலும், காங்கிரஸ் கட்சியின் வாக்குச்சாவடி முகவர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இருந்தனர். அவர்கள் முறைகேடுகள் குறித்து எந்த புகாரும் அளிக்கவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையிலும் எந்த புகாரும் தெரிவிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியது.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை. தொடர்ந்து தங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. வரவிருக்கும் தேர்தல்களில் இது ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.