மசோதாக்களை நிறைவேற விட மாட்டோம் - தொகுதி மறுவரையறைக்கு எதிராக ராகுல் காந்தி ஆவேச பேச்சு

Su.tha Arivalagan
Apr 17, 2026,05:46 PM IST

புதுடெல்லி  : மக்களவையில் இன்று நடைபெற்ற தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான காரசாரமான விவாதத்தில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று மத்திய பாஜக அரசை கடுமையாகச் சாடிப் பேசினார். தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.


"அதிகாரத்தை பறிக்கும் முயற்சி" :


நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பாஜக அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். அவர் பேசுகையில், "பாஜக அரசு தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பதற்காக தென்னிந்தியா மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தைப் பறிக்க முயற்சிக்கிறது. தெற்கு மாநிலங்களை அதிகாரமற்றதாக மாற்றுவதே இந்த அரசின் நோக்கம்." மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைக்கப்பட்டால், குடும்பக் கட்டுப்பாட்டைச் சிறப்பாகச் செயல்படுத்திய தென்னிந்திய மாநிலங்கள் தங்களின் நாடாளுமன்ற இடங்களை இழக்க நேரிடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.


"தென்னிந்திய மக்களே கவலை வேண்டாம்" :




தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, தென்னிந்திய மற்றும் வடகிழக்கு பிராந்திய மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் காங்கிரஸ் கட்சி உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். "தென்னிந்திய மக்களே கவலைப்பட வேண்டாம். உங்கள் உரிமைகளை நாங்கள் பறிபோக விடமாட்டோம். மசோதாக்கள் நிறைவேற ஒருபோதும் அதை அனுமதிக்க மாட்டோம்." "இந்தத் தொகுதி மறுவரையறை மசோதா ஒருபோதும் நிறைவேறாது என்பது ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் நன்றாகத் தெரியும்."


அரசியல் சூழல் :


2026-ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், எதிர்க்கட்சிகள் இதனை ஒரு முக்கியமான அரசியல் ஆயுதமாக முன்னெடுத்துள்ளன. மாநிலங்களுக்கு இடையிலான சமச்சீரற்ற பிரதிநிதித்துவம் கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான வாதமாக உள்ளது.