தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்பு!
சென்னை: தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவியேற்றார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அவருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
தமிழக ஆளுநராகப் பணியாற்றி வந்த ஆர்.என்.ரவி மேற்குவங்க ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று பதவியேற்றுக்கொண்டார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க, ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் முறைப்படி பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் தமிழக முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு புதிய ஆளுநருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி.ஆனந்த போஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து, அங்கு ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக காலியாக இருந்த தமிழக ஆளுநர் பதவியைக் கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதலாகக் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அறிவித்திருந்தார்.
அதன்படி, நேற்றிரவு சென்னை வந்த அவர் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் ஒரு அனுபவம் வாய்ந்த அரசியல்வாதி. கோவா மாநிலத்தைச் சேர்ந்த இவர். அம்மாநிலச் சட்டமன்றத்தின் சபாநாயகராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர். இதற்கு முன்னதாக இமாச்சலப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகச் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். தற்போது கேரள ஆளுநராக இருக்கும் இவர், தமிழகத்தின் நிர்வாகச் செயல்பாடுகளைக் கவனிக்கும் கூடுதல் பொறுப்பைப் பெற்றுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்த விவாதங்களுக்கு மத்தியில், புதிய பொறுப்பு ஆளுநரின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் நிர்வாகக் கோப்புகளை அவர் ஆய்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.