Sa No to Drugs: போதைக்கு நோ செல்லுங்க... இளைஞர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அட்வைஸ்
சென்னை: திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் ரஜினிகாந்த், இன்றைய இளைஞர்களின் எதிர்காலம் மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து மிக முக்கியமான ஆலோசனைகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கல்வி, உடல் ஆரோக்கியம் மற்றும் தற்காலச் சூழல் குறித்துப் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
இளைஞர்களின் வாழ்க்கையில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ரஜினிகாந்த், "படிக்கும் காலத்தில் படிப்பில் மட்டும்தான் முழு கவனமும் இருக்க வேண்டும்" என்று கூறினார். அந்தப் பொன்னான நேரத்தைத் தவறவிட்டால், பிற்காலத்தில் வாழ்க்கையில் மிகப்பெரிய சவால்களையும் கஷ்டங்களையும் சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்தார். சிந்தனைகள் சிதறாமல் கல்வியில் ஒருமுகப்படுவது தான் வெற்றிக்கான வழி என்றார் ரஜினி.
இன்றைய இளைய சமுதாயம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலான போதைப் பழக்கம் குறித்து ரஜினிகாந்த் மிகவும் கவலையுடன் பேசினார். முதலில் ஒவ்வொருவரும் தங்களது உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்க வேண்டும். இளைஞர்கள் யாரும் மதுப் பழக்கத்திற்கோ அல்லது கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கோ அடிமையாகிவிடக் கூடாது. போதைப் பழக்கம் உள்ள நண்பர்கள் யாராவது இருந்தால், அவர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும். அப்படிப்பட்ட நட்பு உங்களை அழிவுப் பாதைக்கே அழைத்துச் செல்லும் என அவர் அறிவுறுத்தினார்.
நடிகர்கள் மீது இளைஞர்கள் காட்டும் அதீத ஆர்வம் மற்றும் அதனால் ஏற்படும் விபரீதங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "இளைஞர்கள்தான் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஏதாவது அசம்பாவிதம் நடந்து அடிபட்டால், அது அவர்களுக்குத்தானே காயத்தையும் வலியையும் தரும்?" என்றார்.
விஜய்யின் 'ஜனநாயகன்'பற்றி ரஜினியின் பதில்:
அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான கேள்வி ரஜினிகாந்திடம் முன்வைக்கப்பட்டது. அதற்கு மிகவும் சுருக்கமாகப் பதிலளித்த அவர், "சாரி... கருத்து சொல்ல விரும்பவில்லை" என்று கூறி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.