கர்நாடகாவில் தக் லைஃப் ரிலீஸ் தள்ளி வைப்பு.. ராஜ்கமல் நிறுவனம் அதிரடி அறிவிப்பு

Su.tha Arivalagan
Jun 03, 2025,11:31 PM IST

பெங்களூரு : கன்னட மொழி விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்து வரும் நிலையில், அவர் நடித்த தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் ரிலீஸ் செய்வதை தள்ளி வைப்பதாக ராஜ்கமல் நிறுவனம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்துள்ள தக்லைஃப் படம் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. இந்த படம் ஜூன் 05ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பட விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்து தான் கன்னட மொழி வந்ததாக பேசினார். இது பெரும் சர்ச்சையயும், எதிர்ப்பையும் கிளப்பியது.


இந்த நிலையில், தக்லைஃப் ரிலீசாகும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என கோரி படத்தில் ஹீரோவும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான கமல்ஹாசன் கர்நாடக ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த கோர்ட், கமல்ஹாசனை மன்னிப்பு கேட்கும் படி உத்தரவிட்டது. ஆனால் அவர் ஏற்கனவே கன்னட திரைப்பட சேம்பருக்கு விளக்கக் கடிதம் அனுப்பி விட்டதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் வாதிடப்பட்டது. 




இதையடுத்து அந்தக் கடிதத்தைப் பரிசீலித்த கர்நாடக உயர்நீதிமன்றம், தன்னுடைய பேச்சிற்கு விளக்கம் அளித்து மட்டுமே திரைப்பட சேம்பருக்கு கமல் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் மன்னிப்பு என்ற வார்த்தை இடம்பெறவில்லை. மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன ஈகோ? ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள்? என கேள்வி எழுப்பியதகு. 


இதற்கு கமல்ஹாசன் தரப்பில் தவறு செய்திருந்தால்தானே மன்னிப்பு கேட்க முடியும். தவறுதலாக புரிந்து கொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க முடியும் என்ற வாதத்தை முன்வைத்தது. இதையடுத்து கர்நாடக அரசு, கன்னட திரைப்பட வர்த்தக சங்கம், கமல்ஹாசன் தரப்பு பேச்சுவார்த்தை நடத்துமாறும், அதில் உடன்பாடு ஏற்படும் வரை படம் திரையிட முடியாது என்றும் உத்தரவிட்டு, ஜூன் 10ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.