RCB: அதை மட்டும் மாத்த மாட்டோம்.. கவலைப்படாதீங்க.. உறுதிப்படுத்திய அனன்யா பிர்லா
பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பெரும் விலைக்கு வாங்கிய ஆதித்யா பிர்லா நிறுவனம், அணியின் பெயரை மாற்றி விடுமோ என்ற கவலை ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் அப்படியெல்லாம் நடக்காது என்று அந்தக் குழுமத்தைச் சேர்ந்த அனன்யா பிர்லா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2026 சீசன் தொடங்குவதற்கு முன்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்துள்ளது. சுமார் 16,700 கோடி ரூபாய்க்கு இந்த அணி விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆதித்ய பிர்லா குழுமம் தலைமையிலான கூட்டமைப்பு இந்த அணியை வாங்கியுள்ளது.
கடந்த பல ஆண்டுகளாக டியாஜியோ நிறுவனத்தின் கீழ் இருந்த ஆர்சிபி அணியை, இப்போது ஆதித்ய பிர்லா குழுமம், டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் மற்றும் பிளாக்ஸ்டோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து வாங்கியுள்ளன. ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு அணி இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறை.
"புதிய உரிமையாளர்கள் கைக்கு அணி மாறியுள்ளதால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்ற பெயர் மாற்றப்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. குறிப்பாக, பிர்லா குழுமம் அணியை வாங்கியுள்ளதால் பிர்லா பெயர் அணியில் சேர்க்கப்படுமா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்தக் குழப்பங்களுக்கு ஆதித்ய பிர்லா குழுமத்தின் முக்கிய முகங்களில் ஒருவரான அனன்யா பிர்லா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில், "ஆர்சிபி அணியின் பெயரில் எந்த மாற்றமும் இருக்காது" என்பதை அவர் சூசகமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அனன்யா பிர்லா தனது பதிவில், "ஆர்சிபி ரசிகர்கள் காட்டும் அன்பிற்கு நன்றி. உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம். 'ஈ சாலா கப் நம்தே' எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அணியின் பாரம்பரியம் மற்றும் பெயர் அப்படியே தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.
இந்த விற்பனைக்கு பிறகு, ஆர்யமன் விக்ரம் பிர்லா அணியின் தலைவராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2025-ல் தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்ற ஆர்சிபி அணி, புதிய உரிமையாளர்களின் கீழ் 2026-ல் தனது மகுடத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தயாராகி வருகிறது.