கேரளாவில் இன்று 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம்!

Meenakshi
May 26, 2025,12:30 PM IST

திருவனந்தபுரம்: கேரளானில் இன்று 11 மாவட்டங்களுக்கு அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.


வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். இந்தாண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கியுள்ளது. கடந்த 16 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக மே மாதத்தில் தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாகவே கேரள எல்லையோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.


கேரளாவில் இடுக்கி மாவட்டம், எர்ணாகுளம், வயநாடு, கோட்டயம், பாலக்காடு, காசர்கோடு, கன்னூர், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஏற்கனவே இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டிருந்த நிலையில், கேரள அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.




 இந்த நிலையில், கேரளாவில் இன்றும் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசர்கோடு, கன்னூர், கோழிக்கோடு, வயநாடு, மலப்புரம், பாலக்காடு, திரிச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, பத்தினம் திட்டா ஆகிய 11 மாவட்டங்களில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் 7 முதல் 20 செ.மீ வரை அடுத்த 24 மணி நேரத்திற்கு பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதேபோன்று திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களிலும் அதிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.