8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்... 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்... வானிலை மையம் எச்சரிக்கை!
சென்னை: தமிழகத்தில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுத்துள்ளது வானிலை மையம்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியிலும், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் இரு வெவ்வேறு புயல் சின்னங்கள் உருவாகியுள்ளதால், தமிழகம், கேரளம் மற்றும் புதுவையில் கனமழை பெய்து வருகின்றது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கக் கடலில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி உள்ளது. இது மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் மண்டலமாக தீவிரமடையும்.
இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்றும், இது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:
விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 21) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 10 மாவட்டங்களுக்கு இன்று (அக்டோபர் 21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 20.4 செ.மீ வரை மழை பதிவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:
ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய 7 மசவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது வானிலை மையம்.
நாளை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:
செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்:
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, காரைக்கால் ஆகிய 12 மாவட்டங்களுக்கு நாளை ( அக்டோபர் 22) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
நாளை 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்:
வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி ஆகிய 5 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.