RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

Su.tha Arivalagan
May 01, 2026,12:04 PM IST

- மொழிப்பித்தன் இரா.ச. குமார்


அடர்த்தியான பின்னிரவை

அப்படியே எழுத முடியுமா என்னால்

இப்படியுமொரு 

வினா எனக்குள்...


முடியும் முடியாதென

வரையறுத்து விட முடியாது

எல்லாம் எழுத முயற்சி...


முயற்சிதான்

இருந்தும்

விடுபடலாம் 

அதிலும் ஒன்றிரண்டு...




அதன் முன்பே

இருளை உள்வாங்கல்

அவசியமாகிறது

பின்பே

காரிருள் கிழித்து மொத்தமாய் 

ஊடுருவி 

அடர் இருளுக்குள் புக வேண்டியதுமாகிறது...


அவசியமெனில் வரிகளுக்குள்

இருளை பூசி 

இருள் இப்படியாகத்தான் இருக்குமென

வர்ணித்து

ஒரு வரையறை தர வேண்டியதாகிறது...


கருப்பிலே கூட மங்கலானது

அடர் கருப்பென இரண்டு

இதில் 

இதுதான் கருப்பென

எதை சொல்லி

கவிதைக்கு இறுதி வடிவம் தருவது...


மரக்கிளைகளில் 

படிந்திருக்கும் இருள்

அப்புறப்படுத்த முயலும்

பிறை நிலவு

இதையும் வரியாக்கி விடலாமா?


அதிபயங்கர கருப்பென குறிப்பெழுதி விட முடியாது

காரணம்

தூரத்து வானத்தில்

மங்கிய வெளிச்சத்தில்

ஒன்றல்ல ஓராயிரம் விண்மீன்கள்

ஆக

அதிபயங்கரமென சொன்னால்

மையிருட்டைக் காட்டி

மங்கிய கருப்போடு ஒப்பிட வேண்டும்...


எது எப்படியோ

உறக்கம் தொலைத்ததில் 

கிடைத்தது 

ஒன்றல்ல ஓராயிரம் கரு கவிதைக்கு...!