சாமியே சரணம் ஐயப்பா.. சபரிமலை கோவில்.. 5 நாள் பூஜைக்குப் பிறகு.. இன்று நடை அடைப்பு
- ஸ்வர்ணலட்சுமி
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் மாசி மாதத்திற்கான ஐந்து நாட்கள் பூஜைக்கு பிறகு 17. 2 .2025 அன்று அடைக்கப்படும்.
சபரிமலை ஐயப்பன் என்றாலே தை முதல் நாள் ஏற்றப்படும் மகரஜோதி தான் நம் அனைவர் மனதிலும் வரும். இந்தியாவில் கேரள மாநிலத்தில் உள்ள யாத்திரை தலங்களில் ஒன்று இந்த சபரிமலை.. இது ஆண்டு தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் வழிபடும் ஸ்தலம்.
பத்தினம் திட்டா மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3000 அடி உயரத்தில் மலை உச்சியில் அமைந்துள்ளது இந்த தர்மசாஸ்தா சபரி ஐயப்பன் திருக்கோவில். இந்த சபரி ஐயப்பன் கோவில் ஆண்டு முழுவதும் தரிசனம் செய்ய திறக்கப்படுவதில்லை.
விசு, மகரஜோதி மற்றும் ஒவ்வொரு மலையாள மாதத்தின் முதல் நாள் வழிபாட்டிற்கு இக்கோவில் திறக்கப்படுகிறது. வருடாந்திர மண்டல பூஜை காலம் 20 24 நவம்பர் 16ஆம் தேதி தொடங்கியது. 41 நாட்கள் யாத்திரை காலம் நடைபெற்று நிறைவு பெற்றது. கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. அன்று சுவாமி ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது .. அதன் பிறகு கோவில் நடை சாத்தப்பட்டது.
பிறகு மகர விளக்கு பூஜைக்காக 2024 டிசம்பர் 30ஆம் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. அனைவரும் கொண்டாடும் மகர விளக்கு பூஜை நிகழ்வானது 2025 ஜனவரி 14ஆம் தேதி மாலை சிறப்பாக நடைபெற்றது. மண்டல பூஜை காலம் நிறைவடைந்தது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஜனவரி 20 ஆம் தேதி அன்று அடைக்கப்பட்டது.
இதையடுத்து மாசி மாதம் பூஜைக்கு கோவில் நடையை 20 25 பிப்ரவரி 12 அன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். ஆனால் அன்று வேறு பூஜைகள் நடைபெறவில்லை.
பிப்ரவரி 13 அன்று அதிகாலையில் கணபதி ஹோமம் நடைபெற்றது. மேலும் இரவில் படி பூஜையும் சிறப்பாக நடைபெற்றது .மற்ற கோவில்களுக்கு இல்லாத சிறப்பு ஐயப்பன் கோவிலுக்கு உண்டு என்றால் அது அங்கு நடைபெறும் 18 படி பூஜை தான் ,இந்த ஐந்து நாட்கள் அதாவது பிப்ரவரி 13ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட கோவில் நடை பிப்ரவரி 17ஆம் தேதி வரை திறந்து இருக்கும்.
ஆகையால் சபரிமலைக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து இருமுடி கட்டி, பார்த்த சாரதியின் மைந்தன் ஐயப்பனை காண பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சாமியே சரணம் ஐயப்பா!