பாதுகாப்பான தீபாவளி - பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்பு அலுவலர் விழிப்புணர்வு பேச்சு
சிவகங்கை: பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது குறித்து தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலைய அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தீயணைப்பு - மீட்பு பணிகள் நிலைய அதிகாரிகள் பள்ளி மாணவர்களுக்கு நேரடி செயல் முறை விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில், தேவகோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தை சார்ந்த முன்னனி தீயணைப்போர் ஆறுமுகம், நாக கார்த்திக், சொக்கலிங்கம், விக்னேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கம் கொடுத்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியின் போது தேவகோட்டை தீயணைப்பு மீட்பு பணிகள் நிலைய அலுவலர் கணேசன் பேசுகையில், குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். தவறுதலாக நம்மீது வெடி விழுந்துவிட்டால் ஸ்டாப், ட்ராப், ரோல் என்கிற முறையை பின்பற்றுங்கள் .
புஷ்வாணம், சங்கு சக்கரம், வெடிகள் வைக்கும்போது பெரிய ஊதுபத்தியை பயன்படுத்துங்கள். சுமார் இரண்டு அடி தள்ளி நின்று வெடியை வையுங்கள். வெடி , வெடிக்கும்போது எப்போதுமே அருகில் தண்ணீர் வைத்து கொள்ளுங்கள்.வெடிகளை பாட்டில், கொட்டாங்குச்சி போன்றவற்றில் வைத்து வெடிக்க கூடாது. வெடிகளை கைகளில் பிடித்து வெடிக்க கூடாது. வெடிக்காமல் இருக்கும் வெடிகளை ஒன்று சேர்த்து தீ வைக்க கூடாது. அவ்வாறு செய்தால் நமது முகத்தில் வெடி வந்து விழுந்து பாதிப்பு ஏற்படும்.
வெடிகளை வெடிக்கும்போது நைலான், பாலியஸ்டர் துணிகளை போட்டு கொண்டு வெடிக்க வேண்டாம். பருத்தி துணிகளை அணிந்து மட்டுமே வெடியுங்கள். அதுவே பாதுகாப்பானது. வெடிகளை சட்டை, பேண்ட் பைகளில் வைத்து கொள்ள வேண்டாம். நாம் வெடிக்கும்போது கவன குறைவாக இருந்தால் நமது மேல் வெடி தீ விழுந்தால் பைகளில் உள்ள வெடிகளும் வெடித்து உயிருக்கு ஆபத்தாகும்.எனவே பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுங்கள் என்று தெரிவித்தார். மேலும், பாதுகாப்பான தீபாவளி குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள். நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.