திருக்குறள் திருவிழா.. மூத்த குடிமக்கள், ஆசிரியர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவம்!
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் மேலப்பழங்கூர் அறம்பழகு அறக்கட்டளை, சென்னையைச் சேர்ந்த சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா, வேலூரைச் சேர்ந்த திருவள்ளுவர் சேவா சங்கம் ஆகிய மூன்றும் இணைந்து நடத்திய திருக்குறள் திருவிழா சிறப்பாக நடந்தேறியது.
ஜனவரி 16ம் தேதியன்று, மேலப்பழங்கூர் ஸ்ரீமாரியம்மன் கோவில் வளாகத்தில் காலை 9 மணிக்கு விழா தொடங்கியது.
தமிழ்த்தாய் வாழ்த்து, வள்ளுவர் வணக்கப் பாடலுடன் தொடங்கிய விழாவில் நாட்டிய செல்வி தரணி சங்கர் வரவேற்புப் பாடலை பாடி சிறப்பித்தார்.
அறம் பழகு அறக்கட்டளையும் சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவும் இணைந்து நடத்திய இந்த திருவள்ளுவர் திருநாள் விழாவில் மூத்த குடி மக்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி முக்கியமாக இடம் பெற்றது. சங்கத் தமிழ் இலக்கியப் பூங்காவின் கள்ளக்குறிச்சி கவிஞர் திருமதி வாசுகி பொன்னரசு பங்கேற்றார்.
மூத்த குடிமக்கள் 50 பேருக்கு சால்வை அணிவித்தல் கைத்தடி வழங்குதல் அவர்களை சிறப்பித்தல் நிகழ்வு நடைபெற்றது. மேலும் 350 மாணவர்கள் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இயற்கை மருத்துவர் மூ நா ராஜேந்திரன் மற்றும் சங்கத்தமிழ் இலக்கிய பூங்காவின் ஒருங்கிணைப்பாளர் நீலகண்ட தமிழன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
பாவலர் கொற்றவை குமரன், கவிஞர் வாசுகி பொன்னரசு உள்ளிட்டோர் நடுவர்களாக பங்களிப்பு செய்து வாழ்த்துரை வழங்கினர். 1330 திருக்குறளையும் மனனம் செய்து ஒப்பித்த வாலாஜாபேட்டை சேர்ந்த செல்வி பிரதிபா, செல்வி லித்திகா ஆகிய மாணவச் செல்வங்களுக்கு தலா 2500/- பரிசு வழங்கப்பட்டது. மேலும் பலரும் அச்சிறுமிகளுக்கு பரிசுத்தொகைகளை வழங்கினர்.
நிகழ்வின் தொடக்கத்தில் முதியவர்களை வணங்கியது போல நிகழ்வு நிறைவில் ஆசிரியர்களை வணங்கி இவர்கள் மூவருமே தெய்வங்கள் என்று போற்றப்பட்டது இந்நிகழ்ச்சியின் சிறப்பாகும்.