நடிகையுடன் விஜய்க்குத் தொடர்பு.. விவாகத்து தர வேண்டும்.. மனைவி சங்கீதா பரபரப்பு வழக்கு

Su.tha Arivalagan
Feb 27, 2026,06:06 PM IST

செங்கல்பட்டு: எனது கணவர் நடிகர் விஜய்க்கு, நடிகையுடன் தொடர்பு உள்ளது. இதை கைவிடுமாறு வலியுறுத்தியும் அவர் விடவில்லை. இதனால் அவருக்கும் எனக்கும் மண முறிவு வழங்க வேண்டும் என்று அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.


தவெக தலைவர் விஜய்க்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் வந்து சேர்ந்துள்ளது. அவரது அரசியலையே ஆட்டிப்படைக்கும் வகையிலான புகார்களையும் தனது விவாகரத்து மனுவில் மனைவி சங்கீதா கொடுத்துள்ளார் என்பதால் விஜய் தரப்பு பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.


செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் மனைவி சங்கீதா. அதில் தனது கணவருக்கும் ஒரு நடிகைக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை 2021ம் ஆண்டு கண்டுபிடித்தேன். அதைக் கைவிட்டு விடுவதாக அவர் உறுதியளித்தார். ஆனால் விடவில்லை. மாறாக தொடர்ந்து வந்தார். இதனால் இருவரும் ஒரே வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தோம்.




என்னை விழாக்கள், சமூகம் என எல்லாவற்றிலும் அவர் புறக்கணித்தார். அதேசமயம், அந்த நடிகையுடன் வெளிநாடுகளுக்குப் போவது, புகைப்படம் வெளியிடுவது என நடந்து கொள்ள ஆரம்பித்தார். இதையடுத்தே விவாகரத்து கோரி மனு செய்துள்ளேன்.


நடிகையுடன் இருந்த உறவைக் கண்டுபிடித்ததைத் தொடர்ந்து இரக்கமே இல்லாமல் என்னிடம் நடந்து கொண்டார். பொது வெளியில் நான் சுதந்திரமாக நடமாட முடியாத அளவுக்கும் செய்து விட்டார். பொது மாண்பு கருதி இப்போதைக்கு அந்த நடிகையின் பெயர் விவரத்தை நான் வெளியிடவில்லை. நெருக்கடிகள் ஏற்பட்டால் தேவையான ஆதாரத்துடன் அவற்றை வெளியிடுவேன் என்று கூறியுள்ளார் சங்கீதா.


இந்த விவாகரத்து மனு மீதான முதல் விசாரணை வரும் ஏப்ரல் 20ம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கும் உத்தரவு போயுள்ளதாக கூறப்படுகிறது.


விஜய் தனது சினிமா வாழ்க்கையைத் துறந்து, 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தித் தீவிர அரசியலில் இறங்கியுள்ள இந்த முக்கியமான காலகட்டத்தில், இத்தகைய தனிப்பட்ட வாழ்க்கைச் செய்திகள் அவரது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த 2023 மற்றும் 2024-ஆம் ஆண்டுகளிலும் இதே போன்ற செய்திகள் பரவின. அப்போது விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் அது வதந்தி என்று மறுத்தனர். ஆனால், இம்முறை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இது குறித்து நடிகர் விஜய் தரப்பிலிருந்தோ அல்லது சங்கீதா தரப்பிலிருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வமான மறுப்போ அல்லது உறுதிப்படுத்தலோ வெளியிடப்படவில்லை.