Sanju Samson: மும்பை அரையிறுதியில் சஞ்சு சாம்சன் ருத்ரதாண்டவம்.. அந்த அரபிக் கடலே அதிர்ந்து போச்சு!

Su.tha Arivalagan
Mar 05, 2026,08:07 PM IST

மும்பை: மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் வானவேடிக்கை காட்டி வெளுத்தெடுத்து விட்டார். 


அரபிக் கடலின் ஆரவாரத்திற்குப் போட்டியாக அவர் காட்டிய அதிரடி  ரன் குவிப்பு 89 ரன்களில் நின்று போனதால் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடந்த போட்டியில் 97 ரன்கள் எடுத்து அசத்திய சாம்சன், அதே வேகத்தை இன்றும் தொடர்ந்தார்  சரமாரியாக அவர் ரன்களைக் குவித்து வந்ததால் போட்டியில் பெரும் விறுவிறுப்பு நிலவியது. 


கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் சரவெடி காட்டிய சஞ்சு சாம்சன் போட்டி முழுவதும் களத்தில் நின்று ஆட்டமிழக்காமல் 97 ரன்களைக் குவித்து வெளுத்துக் கட்டினார். தற்போதும் அதே ஸ்டைலில் அதிரடியாக ஆடினார் சஞ்சு சாம்சன்.




ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே அதிரடி காட்டிய சஞ்சு சாம்சன், வெறும் 26 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சாம் கரன் ஆகியோரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த சாம்சன், பவர்பிளே ஓவர்களிலேயே இந்தியாவின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். அவரை எப்படி சமாளிப்பது எனத் தெரியாமல் இங்கிலாந்து அணி திக்கித் திணறி விட்டனர். தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த சஞ்சு சாம்சன், 41 பந்துகளில் 89 ரன்கள் எடுத்த நிலையில் பில் சால்ட் பந்து வீச்சில் வில் ஜேக்ஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சஞ்சு வீழ்ந்தது ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியது.


இந்திய அணி 15.4 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்துள்ளது.


முன்னதாக அபிஷேக் சர்மா விரைவில் ஆட்டமிழந்தாலும், இஷான் கிஷனுடன் (39) இணைந்து சாம்சன் அமைத்த பார்ட்னர்ஷிப் இங்கிலாந்து அணிக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.


இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, மார்ச் 8-ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்ளும். சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் இந்திய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்திய அணி கண்டிப்பாக 225 ரன்களைத் தாண்டும் என்ற நம்பிக்கையில் அனைவரும் உள்ளனர்.