கடவுள் ஏன் கல்லானார்?
- செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை
கடவுள் ஏன் கல்லானார்.....?
தான் படைத்த மனித இனத்தைச்
சாதிப்பிரிவுகளாக்கிய மூடர்களாலா ?
அற்புத இயற்கையை அளித்தும்
அதிலும் ஆயிரம் செயற்கையைப் புகுத்தியதாலா?
மனித உள்ளமெல்லாம் தன்னலமாக
உருக்குலைந்து மாறியதாலா?
கடமை தவறி கண்ணியமின்றி
நஞ்செனும் கையூட்டுப் பெறுவதாலா?
கருணை என்பது கடுகளவுமின்றி
பல பாவங்கள் நடப்பதாலா?
கண்முன்னே நடக்கும் அநீதி கண்டும்
எதிர்க்காது அவரவர் பாதையில் செல்வதாலா ?
காதல் என்பதன் புனிதம் மறைந்து
கட்டுடல் மோகம் விளைந்ததாலா ?
முறையின்றிப் பிறந்த மழலை
விழி திறக்கும் முன் வீசப்படும் நிலை அறிந்ததாலா?
சிற்றுயிராயினும் வதைபடுவது கண்டு துடிக்காது
மனிதம் மரணித்துப் போனதாலா?
பெண்மையின் மென்மையைப் போற்றாது
சூறையாடிச் சீரழிக்கும் சிறுமையைக் கண்டதாலா?
காளியெனப் பெண்ணவள் தன்நிலை தன்னுள்
ஒளிர்வதைத் தானே அறியாததாலா?
கல்லில் வடித்ததால் கல்லானாரோ?
மனிதக் கல் மனம் கண்டு கல்லானாரோ?
அறிந்தோரே!சற்றேனும் உரைப்பீரோ!
கடவுள் ஏன் கல்லானார்?.....
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)