வீணையடி நீ எனக்கு

Su.tha Arivalagan
Aug 13, 2026,04:18 PM IST

 - செ. சாந்தி சின்னத்தம்பி, மதுரை 


சின்னஞ்சிறு விழியாலே 

சிக்கல்களைத் தீர்த்தவளே!


கொஞ்சுகின்ற மொழியாலே 

உளமதில் உவகை சேர்த்தவளே !


தஞ்சமென மடியில் வந்தமர்ந்து 

தாலாட்டு இசைக்கும் தாயானவளே!


விஞ்சுகின்ற அபிநயங்களால் 

வித்தைகள் காட்டுபவளே !


தளிர்க்கையால் தலைநீவிப் 

பண்பாடும் சேயானவளே !


அல்லலுறும் வேளையிலே 

ஆறுதலாய் இருப்பவளே!




அழகிய செவ்விதழால் 

ரோஜாவாய்ச் சிரிப்பவளே!


புதிரான வாழ்வினிலே 

புதுமைப் பூக்கச் செய்த புது மலரே!


எப்பிறப்பும் என் அருகே வேண்டுமடி நீ எனக்கு 

ஏழிசை ராகமும் என்னுள்ளே நான் இசைக்க

பொக்கிஷமாய்க் கிடைத்த வீணையடி நீ எனக்கு !


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)