எம்ஜிஆர் சிவாஜி மட்டும் இல்லை.. விஜய் சூர்யாவுடனும் கலக்கிய சரோஜாதேவி!
சென்னை: எம்ஜிஆர், சிவாஜிகேணசன் மட்டும் இல்லாமல், தற்போதைய முன்னணி நடிகர்களான விஜய், சூர்யாவுடனும் நடித்து கலக்கியவர் சரோஜாதேவி.
தமிழ் திரைத்துறையைச் சேர்ந்த மூத்த நடிகை சரோஜாதேவி இன்று காலமானார். பெங்களூரில் வசித்து வந்த அவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் வயது 87. கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட சரோஜாதேவி, தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 200க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1955ம் ஆண்டு ஹொன்னப்ப பாகவதர் தயாரித்த 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தில் அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. இதையடுத்து திரை உலகிற்காக ராதா தேவி என்ற தன் பெயரை சரோஜா தேவி என்று மாற்றி கொண்டார். தமிழில் 1958ம் ஆண்டு வெளியான நாடோடி மன்னன் படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் என்றே சொல்லலாம்.
திரைப்படத்துறையினராலும், ரசிகர்களாலும், கன்னடத்துப் பைங்கிளி, அபிநய சரசுவதி போன்ற அடைமொழிகளால் அழைக்கப்பட்டவர். இந்திய அரசின் பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் உள்பட பல்வேறு விருதுகளை இவர் வென்றுள்ளார். தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகாவின் மாநில அரசு விருதுகளையும் வென்றவர் சரோஜா தேவி.
தமிழில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகிய 3 நடிகர்களுடன் ஒரே காலகட்டத்தில் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றவர். தமிழ் திரைப்படங்களில் இவரது முகபாவம், நடிப்பு திறமைக்காக ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. ஒரு காலத்தில் 'சூப்பர் ஸ்டார்'களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமைகளை பெற்றவர் நடிகை சரோஜாதேவி.
நீண்ட இடைவேளைக்கு பின்னர் 1997ம் ஆண்டு வெளிவந்த ஒன்ஸ்மோர் திரைப்படம் நடித்தார். இந்த திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி, விஜய், சிம்ரன் நடித்திருந்தனர். இந்த படத்திலும் சிவாஜி கணேசனுக்கு ஜோடியாவே நடித்தவர் சரோஜா தேவி. அன்றைய கால கட்டத்தில் விஜய், சிம்ரனுக்காக படம் பார்க்க சென்றவர்களை விட சிவானி கணேசன் மற்றும் சரோஜா தேவிக்காக படம் பார்க்க சென்றவர்கள் தான் அதிகம் என்று சொல்லலாம். இந்த படத்திலும் சரோஜா தேவியின் கொஞ்சும் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன்பின்னர் தமிழில் நடிகர் சூர்யா, வடிவேலுவுடன் இணைந்து ஆதவன் என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இந்த படத்தில் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சரோஜா தேவி.
ஒரு நேர்காணல் ஒன்றில் சரோஜா தேவி கலந்து கொண்டு பேசுகையில், அனைவரையும் போலத்தான் அவர்கள் இருவரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதிலும் நான் ஷூட்டிங் ஸ்பாட் போன உடனே சூர்யா வந்து என்னை கையை பிடிச்சு கூட்டிட்டு போவாரு. விஜய் அவ்வளவு பிரியமா இருப்பார். நானும் அவங்க கிட்ட அப்படி தான் இருப்பேன்" என்றார் கூறியுள்ளார் சரோஜா தேவி.
இத்தகைய பழம் பெரும் நடிகை சரோஜா தேவியின் மறைவுக்குத் திரையுலக பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.