நம் வாழ்க்கை நம் கையிலா?
- சசிகலா விஸ்வநாதன்
(அழகியசிங்கரின் என்பா)
முந்தை வினை முன்னின்று இழுக்க
பின்னை வினைகள் பின்னின்று தள்ள
என்னென்று சொல்லி நான் நொந்தேன்;
நம் வாழ்க்கை நம் கையில்?
உற்றோரும் உலகோரும் உதைத்து தள்ளும்
உருண்டு ஓடும் பந்து போல்
வெருண்ட நான், எங்கனம் நினைப்பேன்;
நம் வாழ்க்கை நம்கையில்?
பாசமுடன் பிள்ளைகளைப் பெற்று, வளரும்
பிள்ளைளே இரவும் பகலும் நினைவில்.
பின்னரும் நான் எப்படி பகருவேன்;
நம் வாழ்க்கை நம்கையில்.
கல்யாண நாள் முதல் கண்ணசைவில்
கட்டளைகள் பிறக்க, அடிபணியும்
நான் எப்படி சொல்வேன், இன்று;
நம் வாழ்க்கை நம் கையில்
நின்றாலும்; அத்தனையும் மறையும்; அத்தனவன்
அருளால், என்றிருக்க; நான் சொல்வேன்
நம் வாழ்க்கை நம்கையில்
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)