அலைபேசி பேச்சு
- சசிகலா விஸ்வநாதன்
அலைபேசியில் பேசும் வாய்...
அவன் கண்களும் கருத்தும்,
என்றும்
கணினியிலும்,
இன்னொரு அலைபேசியிலும்,
துணி துவைக்கும் எந்திரத்திலும்,
அடுப்பில் ஏற்றிய வாணலியில்
கொதிக்கும் குழம்பிலும்;
நானே பேசிக் கொண்டிருக்க;
ஒற்றை வார்த்தையில்
பதில்கள் உதிர
என் உதிரம் கொதிக்க;
கண்ணோடு கண் நோக்கி பேசாத
மகனிடம்,நான் துரிதமாக
கையசைத்து விடை பெறும் நேரத்தில்;
என்னைவிட துரிதமாக அவன்
“அம்மா! அடுத்த வாரம் மீண்டும் பேசலாம்“
கசிந்த கண்கள் இப்போதெல்லாம்
கசியாமல் இருக்கப் பழகிக் கொண்டன.
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)