அலைபேசி பேச்சு

Su.tha Arivalagan
Jun 23, 2026,03:55 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


அலைபேசியில் பேசும் வாய்...

அவன் கண்களும் கருத்தும், 

என்றும்

கணினியிலும்,

இன்னொரு அலைபேசியிலும்,

துணி துவைக்கும் எந்திரத்திலும், 

அடுப்பில் ஏற்றிய வாணலியில்

கொதிக்கும் குழம்பிலும்;


நானே பேசிக் கொண்டிருக்க;

ஒற்றை வார்த்தையில்

பதில்கள் உதிர

என் உதிரம் கொதிக்க;

கண்ணோடு கண் நோக்கி பேசாத

மகனிடம்,நான் துரிதமாக

கையசைத்து விடை பெறும் நேரத்தில்;



என்னைவிட துரிதமாக அவன் 

அலைபேசியைத் துண்டிக்கும் 

தருணத்தில்;அவன் சொன்னது

“அம்மா! அடுத்த வாரம் மீண்டும் பேசலாம்“

கசிந்த கண்கள் இப்போதெல்லாம் 

கசியாமல் இருக்கப் பழகிக் கொண்டன.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)