திருமண நாள் வாழ்த்து.. ஒரு மணமகளின் வாழ்த்துரை

Su.tha Arivalagan
Aug 27, 2026,04:33 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


ஊர் உலகெல்லாம் 

ஊர் மெச்ச வாழ்க!

நலம் சூழ!

என்றே வாழ்த்த;


நான் உனக்கு

மனமொப்பி

ஓரிரண்டு 

வாக்கு கொடுக்க 

வந்துள்ளேன்! 


சொல்லும் ஆர்வம்

எனக்கு இருப்பது போல்

செவி கொடுக்கும் விருப்பம் 

உனக்கும் இருக்கும் என 

நம்பியே நான் சொல்கிறேன்!




ஏற்றத்திலும் மட்டுமல்ல;

இறக்கத்திலும், உணர்வில் 

கலந்து நான்

எப்போதும் உவந்தே உன்னுடன் இருப்பேன்!


உன் பெற்றோரை 

நம் பெற்றோர் என

நினைத்துப் போற்றுவேன்!


உன் வீட்டை  நம் வீடே என நினைப்பேன்!

உள்ளதும், இல்லதும்,

அறிந்து 

இல்லாமை இல்லா வாழும் வழி அறிந்து வாழ வழி வகுப்பேன்!


மன்றல்  அரங்கில்

நான்  பகரும்   உறுதி மொழிகள்;

உனக்கு மட்டுமல்ல;

எனக்கு நானே

செய்து கொள்ளும்

சத்தியமும் கூட!


இனிமையான திருமண வாழ்க்கை 

நமக்கு அமைய

எனது வாழ்த்துக்கள் 

என்றும் உன்னுடன் 

தங்கி இருக்கட்டும்


இவண்

உன் கரம் பிடிக்க இருக்கும்

மணமகள்


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)