என் கண்ணில் என்ன பார்த்தாய்.. இதுதான் காதலா?
- சசிகலா விஸ்வநாதன்
நினையாத நாளில்
அறியாத நாழிகையில்
புரியாத மொழியில்
கூறிவிட்டாய் நீ;
திடுக்கிட்டு, நான்
திகைப்பை விலக்கி
நாணம் கொண்ட நான்.
நாணம் கொண்ட
என் கண்ணை,
நேர் கொண்டு நீ பார்த்து;
என்ன தேடினாய்?
தேடிய பொருள்
கிடைத்ததா; உனக்கு என்னிடம்?
என் கண்ணில் கண்டதை
நீ விண்டுரைப்பாய் என நானும்;
நான்
விளம்பிடுவேனன
நீயும்;
நீண்ட பொழுது
காத்திருந்தோம்; பொழுதுதான் போனது.
போன பொழுதை பொத்தி வைத்தேன்.
நினைவில், இன்பமாய், இன்று வரை;
திளைக்கிறேன்; இன்னும் புரியவில்லை;
என் கண்ணில் என்ன பார்த்தாய்?
உன் கண் சிரித்ததை, நான்
புரிந்து கொண்டேன்.
புரிந்து கொண்டாய்;
நீயும், என் மனதின் மலர்வை,
இதுதான் காதல் என்பதோ?
இன்றுவரை உன்
கண் பார்த்து
நானும்;
என் கண் பார்த்து
நீயும்;
காணும் பிழை இன்றி
கருத்துப் பிழையும் இன்றி,
சேர்ந்து வாழ்தலின் சுவை அறிந்து;
அவரவர் போக்கின் புரிதலை காத்து;
மதித்து நடக்கும் கலை தெளிந்து;
நம் தேறல் நன்றே
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)